Thursday, January 24, 2008

கப்ர் அல்லது அடக்கஸ்தலத்தின் வாழ்க்கை

கப்ருடைய வாழ்கை

‘உங்களில் ஒருவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டால் அவரிடம் கரு நிறமான நீல நிறக் கண்களுடைய இரண்டு மலக்குகள் வருவார்கள். அவர்கள் முன்கர் என்றும் நகீர் என்றும் சொல்லப்படுவார்கள்’ அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் குறித்து அவனிடத்தில் ‘இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்’ என்று கேட்பார்கள். அவன் (மூமினாக இருந்தால்) ‘அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள்’ என்று கூறுவான். அப்பொழுது அந்த மலக்குள் அவனை நோக்கி நீ இவ்வாறு கூறுவாய் என்பதை ஏற்கெனவே நாம் அறிந்திருந்தோம் என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனுடைய கப்ரு எழுபது ழுழங்கள் விசாலமாக்கப்படும். பின்னர் அந்த கப்ரு ஒலியேற்றப்பட்டு பிரகாசமாக்கப்படும்.

அவனை நோக்கி ‘நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள். அவனோ அவர்களை நோக்கி என்னுடைய குடும்பத்திடம் நான் சென்று (எனக்குக் கிடைத்துள்ள இந்நற் பாக்கியத்தை) அறிவித்து விட்டு வர என்னை விட்டு விடுங்கள் என்ற கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் ‘மிக விருப்பத்துக்குரிய ஒருவரேயன்றி வேறெவரும் எழுப்பாதளவுள்ள மணமகனின் உறக்கமாக நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள். அன்றுமுதல் மறுமை நாள் வரை அவன் உறங்கிக் கொண்டே இருப்பான்.
முனாபிக் ஒருவனிடம் கேள்வி கேட்கும் போது, ‘மக்கள் ஏதேதோ சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் (இப்பொழுது எதுவும்) எனக்குத் தெரியாது’ என்று கூறுவான். அபபொழுது அந்த மலக்குகள் அவனை நோக்கி ‘நீ இவ்வாறே பதிலளிப்பாய் என்பதை ஏற்கனவே நாம் அறிந்து வைத்திருந்தோம்’ என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனை நெருக்குமாறு பூமிக்கு உத்தரவிடப்படும். அவனுடைய (வலது இடது) விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ளுமளவு அவனை நெருக்கும். அவனை அந்த இடத்திலிருந்து அல்லாஹ் எழுப்புகின்ற நாள்வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: அபூஹுரைரா (ரலி))

கப்ரு ஒரு நபித்தோழரைக் கூட நெருக்கியது

கப்ரு என்பது எந்த ஒரு மனிதனையும் இலகுவாக விட்டுவிடாது. அல்லாஹ்வுடைய உத்தரவுப்படி வேதனைகளை அது அளிக்காமல் விட்டு விடாது. கப்ரில் ஒருவனுக்கு மீட்சி கிடைத்து விட்டால் அவனுக்கு மறுமையில் மீட்சி கிடைத்தது போன்றதாகும். நபித் தோழர்களில் நபியவர்களுக்கு மிக விருப்பத்துக்குரிய ஒரு தோழரான ஸஃது (ரலி) அவர்களின் ஸக்ராத்துடைய நிலை நமக்குப் படிப்பினையூட்டக் கூடியதாய் அமைந்துள்ளது.

ஸஃது (ரலி) அவர்கள் அகழ்யுத்தத்தின் போது கடுமையாகக் காயமுற்று நோயுற்றிருந்தார்கள். அவருடைய வீடு சற்று தூரத்திலிருந்ததால் அடிக்கடி அவரை நோய் விசாரிக்கச் செல்ல நபி அவர்களுக்கு சிரமமாயிருந்தது அடிக்கடி சென்று அவரைப் பார்ப்பதற்காக, அவருக்கென்று மஸ்ஜிதுந் நபவிக்கு அருகில் வீடொன்று அமைத்துக் கொடுக்குமாறு நபியவர்கள் தமது தோழர்களைப் பணித்தார்கள். அவ்விதம் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அதன் பின்னால் நபியவர்கள் அடிக்கடி அவரைப் பார்த்து வந்தார்கள். ஒரு நாள் இரவு நடு நிசியில் ஜிப்ராயீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘வானத்திலும் பூமியிலும் உள்ளவர்களைக் கவலையடையச் செய்யக் கூடியதாக ஒருவர் மரணித்து விட்டார். அதனையிட்டு அல்லாஹ்வுடைய அர்ஷ்க்கூட நடுங்குகிறது’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் ஸஃது (ரலி) அவர்களிடம் சென்று பார்த்த போது அவர் இறந்திருக்கக் கண்டார்கள்.

மறுநாள் அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டு, கப்ரினுள் வைக்கப்படுவதைப் பார்த்து கொண்டிருந்த நபியவர்கள் திடீரென ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றார்கள். நபித்தோழர்களும் ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றனர். சற்று நேத்தில் ‘அல்லாஹுஅக்பர்’ என்று நபியவர்கள் கூறினார்கள். நபித் தோழர்களும் அவ்விதமே கூறினார்கள். இவ்விருவார்தைகளாலும் ஆச்சிரியமடைந்த நபித் தோழர்கள் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டு முடிந்ததும் ‘யாரஸுலுல்லாஹ்’ வழக்கத்துக்கு மாறாக இன்று கவலையுடன் ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றும், மீண்டும் சந்தோஷத்துடன் ‘அல்லாஹுஅக்பர்’ என்று கூறினீர்கள் இதன் காரணம் என்ன? என்று கேட்டார்கள்.

அப்பொழது நபிவர்கள் ‘ஸஃது (ரலி) கப்ரினுள் வைக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, கப்ரு அவரை நெருக்குவதைக் கண்ணுற்றேன். அப்பொழுது கவலையுடன் ஸுப்ஹானல்லாஹ் என்றேன். அதனைத் தொடர்ந்து கப்ரு அவரை நெருங்குவதை விட்டு அவருக்க இடம் கொடுத்தது. அப்பொழுது அல்லாஹுஅக்பர்’ என்றேன் என்று கூறிவிட்டு ஒவ்வொரு கப்ரும் ஒவ்வொரு மனிதனையும் நெருக்காமல் விட்டு விடாது அதிலிருந்து ஒருவர் மீட்சி பெற முடியுமென்றிருந்தால் ஸஃது மீட்சி பெற்றிருப்பார் என்று கூறினார்கள். (அஹமது, நஸயீ: ஜாபிர் (ரலி)

‘நிச்சயமாக ஒவ்வொரு கப்ரும் நெருக்கக் கூடியதாய் இருக்கின்றது. அதிலிருந்து ஒருவன் மீட்சி பெறமுடியும் என்றிருந்தால் ஸஃது மீட்சி பெற்றிருப்பார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹமத்: ஆயிஷா (ரலி)

நபியவர்களுடைய கனவில் தோன்றிய கோரக் காட்சிகள்

‘கடந்த இரவு கனவில் என்னிடம் இருவர் வந்து என்னை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றனர். அவர்கள் செல்லும் வழியில் நானும் நடந்தேன். அவ்வழியில் ஒருவன் சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் ஒருவன் பெரிய கல்லொன்றை வைத்து கொண்டு நின்று கொண்டிருந்தான். அவன் அதனைப் படுத்துக் கொண்டிருந்தவனின் தலையில் போட்டான். அதனால் அவனுடைய தலை தகர்ந்து தூள்தூளானது. அந்த கல் உருண்டு கொண்டு போகவே அதனைத் தொடர்ந்து அம்மனிதன் சென்று அதைத்தூக்கி கொண்டு, தான் நின்ற இடத்துக்கே வந்து சேர்ந்தான். அப்போது சிதைதிருந்த தலை மீண்டும் பழைய நிலைக்கு வந்து நன்றாக இருந்தது. மீண்டும் மீண்டும் அவ்விதமே அந்த வேதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது’ இதனைக் கண்ணுற்ற நான் என்னச் அழைத்துச் சென்றவர்களிடம் ‘ஸுப்ஹானல்லாஹ்!’ இவர்கள் யார்? என்ற ஆச்சர்யத்துடன் கேட்டேன் அவர்கள் என்னை நோக்கி நடந்து வருமாறு கூறினார்கள்.

நான் அவர்களுடன் நடந்தேன். அப்பொழுது மல்லாந்து படுத்துக் கொண்டிருந்த ஒருவனுக்கருகில் சென்றோம். அவனுக்கருகில் முன் பக்கம் வளைந்த கம்பியைப் போட்டுப் பிடரி வரை கிழித்தார். பின்மூக்குத் துவாரத்தில் கம்பியைப் போட்டுப் பிடரிவரைகிழித்தார். பின்னர் ஒரு கண்ணில் அதனைப் போட்டுப் பிடரிவரை கிழித்தார். அதனைத் தொடர்ந்து அவனுடைய முகத்தின் மறுபக்கத்தையும் அவ்வாறே கிழித்தார். இப்பக்கத்தைக் கிழித்து முடிய அப்பக்கம் மீண்டும் பழையபடி நல்லநிலையை அடைந்திருந்தது இவ்விதமே தொடர்ந்து அந்த வேதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது நான் ‘ஸுப்ஹானல்லாஹ்’ இவர்கள் யார்? என்று கேட்டேன். அதற்கவர்கள் தொடர்ந்து நடக்குமாறு எனக்குக் கூறினார். நாங்கள் நடந்தோம்.

அப்பொழுது அடுப்பு போன்ற ஓரிடத்துக்குச் சென்றோம். அதன் தோற்றம் (கிணறு போன்று) ஆழமான ஒரு பொந்தாக இருந்தது. அதன் மேற்பாகம் நெருக்கமானதாகவும் கீழ்பாகம் அகண்டதாகவும் இருந்தது. அதனுள்ளிருந்து பயங்கர சத்தம் வெளியாகிக் கொண்டிருந்துது. அதனுள்ளளே எட்டிப்பார்தோம். ஆடையெதுமின்றி ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக இருந்தனர். அதனுள்ளிருந்து நெருப்பு சுவாலை விட்டு எரியும் போது, உள்ளிருப்பவர்கள் (நீரில் மிதப்பது போன்று) மிதந்து வருகின்றனர். அந்தப் பொந்திலிருந்து அவர்கள் வெளியேறிவிடக் கூடியளவு மேல் மட்டத்துக்கு வருகின்ற போது நெருப்பு அணைந்து, மீண்டும் அடித்தளத்துக்கே சென்று விடுகின்றனர்.

இந்த வேதனையும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருந்தது, அதனைக் கண்ணுற்றதும் அவர்கள் யார்? என்று கேட்டேன். அப்பொழுதும் அவர்கள் என்னை நடக்குமாறு கூறினார்கள்.

பின்னர் இரத்த நிறமான நதியொன்றுக்கருகில் சென்றோம். அந்த நதியில் ஒருவன் நீந்திக் கொண்டிருந்தான். மற்றொருவர் நதி ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அவருடைய காலுக்கருகில் கற்கள் நிறைந்திருந்தன. நீந்திக் கொண்டிருந்தவன் கரைவந்து சேருகின்ற போது நின்று கொண்டிருந்தவர். ஒரு கல்லை அவனுடைய வாயினுள் போட்டுவிடுகிறார். அவன் கல்லை விழுங்கிக்கொண்டு மீண்டும் நீந்திச் செல்கிறான். மீண்டும் கரைக்கு வருகிறான். இந்த வேதனையும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருந்தது.

நான் கண்ட காட்சிகளுக்கு, என்னுடன் வந்த இருவரிடமும் இறுதியில் விளக்கம் கேட்டபோது ஒன்றின்பின் ஒன்றாக விளக்கமளித்தார்கள்.

கல்லினால் தலை தகர்க்கப்பட்டவன். அல்குர்ஆனைப் படித்தான். ஆனால் அதன்படி அவனது வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை. பர்ளான தொழுகையைத் தொழாமல் உறங்கிவிட்டான்.

வலமும் இடமுமாக முகம் கிழிக்கப்பட்டவன் காலையில் வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றால் (தனது வயிற்றுப் பிழைப்புக்காக) பொய் சொல்லுவதையே வழக்கமாக்கிக் கொண்டான்.

பொந்தினுள் கண்ட நிர்வாணிகளான ஆண்களும், பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள்.

இரத்த நிறமான நதியொன்றில் நீந்திக் கொண்டு கற்களை விழுங்கிக் கொண்டிருந்தவன் வட்டி உண்டவன்.

நபி (ஸல்) அவர்கள் தமது கனவை மேற்கண்டவாறு சொன்னார்கள். பர்ஸகுடைய உலகில் நடைபெறும் இவ்வாறான வேதனைகள் மறுமை நாள் வரை நடைபெறும் என்றும் கூறினார்கள். (புகாரி: ஸமுரா இப்னு ஜீன்துப் (ரலி))

கப்ரிலுள்ள பாவிகளுக்கு காலையும், மாலையும் நரகம் காட்டப்படுகிறது.

கப்ருடைய வேதனையின் போது பாவிகளுக்குக் காலையும், மாலையும் நரகம் காட்டப்படும் என்பதை பிர்அவ்னுடைய கூட்டத்தை ஆதாரமாக் காட்டி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

பிர்அவ்னுடைய ஜனங்களைத் தீய வேதனை சூழ்ந்து கொண்டது காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுவார்கள். மறுமை நாளிலோ ‘பிர்அவ்னுடைய ஜனங்களைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் (என்று கூறப்படும்)’ (40: 45-46)

சூரிய வெப்பம் கடுமையாகிக் கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி வந்தார்கள். அப்பொழுது ஒரு சப்தத்தை அவர்கள் செவி தாழ்த்திவிட்டு, யூதர்கள் (சிலர்) தமது கப்ருகளின் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிக்கிறார்கள் (அதுதான் இந்த சப்தம்) என்று கூறினார்கள். (புகாரி: அய்யூப் (ரலி)

ஒரு யூதப் பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தபோது கப்ருடைய வேதனைபற்றிக் கூறிவிட்டு ‘அல்லாஹ் உம்மைக் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்பானாக!’ என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) நபியவர்களிடம் கப்ருடைய வேதனைப்பற்றி வினவினார்கள். அதற்கு நபியவர்கள் ‘ஆம் கப்ருடைய வேதனை உண்டு’ என்று பதிலளித்தார்கள்.

‘அதன் பின்னர் நபியவர்கள் எந்த ஒரு தொழுகை தொழுத போதிலும் கப்ருடைய வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தோடாமலிருக்க நான் கண்டதில்லை’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (புகாரி: ஆயிஷா (ரலி))

பாதுகாப்பு கப்ர் வேதனை

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் நான்கு வகையான சோதனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடமலிருந்ததில்லை அதில் முதலாவதாக கப்ருடைய வேதனையிலிருந்தே பாதுகாவல் தேடினார்கள். அந்த துஆ பின்வருமாறு.

‘அல்லாஹ்வே! கப்ருடைய வேதனை, நரக வேதனை வாழ்கையில் மரணத்தின் போதும் ஏற்படக்கூடிய சோதனை, தஜ்ஜாலுடைய வருகையால் ஏற்படக்கூடிய சோதைனை ஆகியவற்றிலிருந்து’ உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். (புகாரி: அபூஹுரைரா (ரலி)

கப்ர்

கப்ரு என்பது மறுமையின் தங்குமிடங்களில் முதலாவது இடமாகும். அதிலிருந்து ஒருவன் மீட்சி பெறுவானென்றால் அதற்குப் பின்னாலுள்ள அனைத்தும் இலகுவாகிவிடும். அதிலிருந்து அவன் மீட்சிபெறவில்லையென்றால் அதற்குப் பின்னாலுள்ள அனைத்தும் அவனுக்குக் கடினமாகி விடும். என்றும் கப்ருடைய காட்சிகளை விடமிகமிக மோசமான எந்த ஒரு காட்சியையும் நான் கண்டதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன் என்றார்கள். (திர்மிதி, இப்னுமாஜா: உத்மான் (ரலி)

‘எவன் தன்னைத் தானே கேள்வி கேட்டு (விசாரனை செய்து) கொண்டு மரணத்துக்குப் பின்னாலுள்ள தனது வாழ்வுக்காக இவ்வுலக வாழ்வை அமைத்துக் கொள்கிறானோ, அவனே புத்திசாலியாவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா : ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி)

இந்த நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு உமர் (ரலி)அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். ‘நீங்கள் (கப்ரிலும் மறுமையிலும்) விசாரணை செய்பப்படுவதற்கு முன்னால் உங்களை நீங்களே விசாரணை செய்து கொள்ளுங்கள். ஒரு பொழுது விசாரனைக்காக நீங்கள் நிறுத்தப் படுவதற்கு முன்னால் உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ளுங்கள். அவன் இம்மையிலும் தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்கிறானோ, அவனுக்கே மறுமை விசாரனை இலகுவாக அமையும்’ (திர்மிதி: உமர் (ரலி)