Thursday, January 24, 2008

இஸ்லாம் கூறும் சுவனம்

என்னுடைய நல்லடியார்களுக்கு எந்தக் கண்ணும் (இதுவரை) கண்டிராத, எந்தக்காதும் செவியுறாத எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றிடாதவை யெல்லாம் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (3:133)

அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (32:17)

நோய், மரணம், முதுமை, பீடைகள் இல்லாத வாழ்வு

சுவர்க்கத்திற்குரியவர்கள் சுவர்க்கத்தின் உள்ளே புகுந்து விட்டால் நீங்கள் ஆரோக்கியத்தோடு வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது, எனவே நீங்கள் எப்போதும் இனி நோயுற மாட்டீர்கள். நீங்கள் நிரந்தரமாக ஜிவித்திருப்பதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டள்ளது. எனவே நீங்கள் எப்போதும் இனி மரணிக்கவே மாட்டீர்கள், நீங்கள் இளமையாகவே இருப்பீர்கள் என்பதை உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ள்ளது. எனவே நீங்கள் எப்போதும் இனி முதுமையை அடையமாட்டீர்கள். நீங்கள் பாக்கியங்கள் பெற்று சுகமாக வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி பீடை பிடித்தவர்களாக ஆகமாட்டிர்கள் என்று அழைப்பாளர் ஒருவர் அழைத்துக் கூறுவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: அபூஹுரைரா (ரலி))

சுவர்க்க வாயில்கள்

நிச்சயமாக சுவர்க்கத்திற்கு எட்டு வாயில்கள் உண்டு. எவர் தொழுகையாளியாக இருந்தாரோ அவர் தொழுகை வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் நோன்பாளியாக இருந்தாரோ அவர் நோன்புடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் தர்மம் செய்தவராக இருந்தாரோ அவர் தர்மத்துடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார். என்று கூறியதும் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த எட்டு வாயில்களிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா?’ என்று அபூபக்கர்(ரலி) கேட்டார்கள். ஆம், அவர்களில் நீரும் இருக்க ஆசிக்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மது, இப்னுமாஜா: ஸஹ்லுப்னு ஸஅத் (ரலி))

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்மோடு ஒப்பந்தம் செய்து வாழும் அந்நியன் ஒருவனை எவர் கொன்று விடுவாரோ அவர் சுவர்க்கவாடையை பெறமாட்டார். தங்கள் மேனிகளை மறைக்காமல் அறை குறை ஆடையில் நீர்வாணமாக உங்களை ஆட்டி அழைத்துச் செல்லும் பெண்கள் சுவர்க்க வாடையை பெறமாட்டார்கள்.
முதன் முதலாக சுவர்க்கத்தில் நுழைபவர்

நான் நபிமார்களை பின்பற்றுவோர்களை அதிகமாகக் கொண்டவன், சுவர்க்கவாசலை தட்டுவோரில் நானே முதன்மையானவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் மறுமை நாளில் சுவர்க்கத்தின் வாயிலுக்கு வந்து அதை திறக்க தேடுவேன். அப்போது யார் என்று என்னிடம் கேட்கப்படும், ‘முஹம்மது’ என்று சொல்லுவேன். உமக்கு முன்னால் நான் திறக்கக் கூடாது என்று உம் விஷயத்தில் நான் ஏவப்பட்டு இருந்தேன். என்று (அதன் பாதுகாவலர்) கூறுவார்.

சுவர்க்கவாசிகளின் இதயங்கள்

தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்; ”இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்” (இதற்கு பதிலாக, ”பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள். (7:43)

மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள். (15:47)

சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தின் நிலை

சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தினர் பவுர்ணமி இரவில் உள்ள முழுநிலவு போன்று இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தவர்கள் வானத்தில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் போன்று இருப்பார்கள். அதற்கு பின்னால் அங்கே பல படித்தரங்கள் உண்டு. மலம் கழிக்கமாட்டார்கள். சிறுநீர் கழிக்கமாட்டார்கள், முக்குச்சளி சிந்த மாட்டார்கள். எச்சில் துப்பமாட்டார்கள். அவர்களுக்கு சீப்பு தங்கத்தினால் ஆனதாகும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணமாகும். அவாகளுடைய குணங்கள் (ஒரே) நிலையில் இருக்கும். அவர்களுடைய பிதா ஆதமுடைய உடல், உயரம் போன்று அறுபது முழத்தில் இருப்பார்கள். அவர்களுக்கிடையே கோபதாபங்களோ, குரோதங்களோ இருக்காது, காலை மாலை நேரங்களில் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து கொண்டிருப்பார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி: அபூஹுரைரா (ரலி))

சுவர்க்கவாசிகளின் வரவேற்பு வார்த்தை

அல்லாஹ் ஆதமை அவருடைய வடிவத்தில் படைத்தான். அறுபது முழம் நீளமாக அவருடைய உயரம் இருந்தது. அவரை படைத்த போது அமரர்களின் ஒரு கூட்டத்தினரிடம் போய் ஸலாம் சொல்வீராக! அவர்கள் உமக்கு எதனை பதிலாக சொல்கிறார்கள் என்று கேளும். அப்பதிலே உமக்கும் உம்முடைய சந்ததியினருக்கும் முகமன் வார்த்தையாகும் என்று அல்லாஹ் கூறினான். அவர்களிடம் சென்று அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினார்கள். அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும வரஹமத்துல்லாஹி என்று ரஹ்மத்துல்லாஹி என்பதை அதிகமாக சொன்னார்கள். சுவர்க்கம் புகும் ஒவ்வொருவரும் ஆதமுடைய வடிவத்தில் அறுபது அடி உயரத்தில் இருப்பார்கள். குறைந்து. அறுபது முழம் உயரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மனித படைப்புகள் குறைந்து (ஆறு அடி உயரத்திற்கு ஆகிவிட்டார்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள். (78:35)

அதில் அவர்கள்; ”(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசுத்தமானவன்” என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். ”எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே” என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும் இருக்கும. (10:10)

சுவர்க்கவாசிகளுடைய பதவிகளின் வித்தியாசங்கள்

சுவர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உண்டு இரண்டு படித்தரங்களுக்கு இடையில் உள்ள வித்தியாசம் பூமிக்கும், வானத்திற்கும் இடையேயான வித்தியாசம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: உபாத துப்னு ஸாமித் (ரலி))

சுவர்க்க வாசிகள் தங்களுக்கு மேலே உயர்பதவியிலுள்ள குரஃப் வாசிகள். அவர்களுக்கிடையே உள்ள பதவி வித்தியாசம் காரணமாக மிகமிக உயரத்தில் கீழ்திசையிலோ அல்லது மேல் திசையிலோ மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரத்தை நீங்கள் பார்ப்பது போன்று பார்ப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த மாதிரியான உயர் பதவியுடைய இடம் நபிமார்களுக்கு உள்ள இடங்களாக இருக்குமோ, அவர்களைத் தவிர வேறு எவரும் அடைய முடியாதவையாக இருக்குமே என்று வினவினார்கள். இல்லை! என் ஆத்மா எவன் கையில் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக! எவர்கள் அல்லாஹ்வை விசுவாசித்து நபிமார்களை உண்மைப்படுத்தி வாழ்ந்தார்களோ அவர்களின் இடமாகும் என்றார்கள். (புகாரி, முஸ்லிம்;: அபூஸயீத் (ரலி))

சுவர்க்க வாசிகளுக்கிடையே, சந்திப்பு ஜியாரத் உண்டா? ஆம் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் கீழ்மட்டத்தில் இறங்கிவந்து முகமன் கூறி ஸலாம் கூறுவார்கள். கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் மேல் மட்டத்திற்கு செல்ல சக்தி பெறமாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் குறைவான அமல்கள் அவர்களை மேலே ஏற்றாது, தடுத்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சுவர்க்கத்தில் கோட்டைகள்

சுவர்க்கத்தில் ஒரு கோட்டையைப் பார்த்தேன் இந்தக் கோட்டை யாருக்கென்று நான் கேட்டேன். குரைஷியரில் உள்ள ஒரு வாலிபருக்கு என்று கூறினார்கள். யார் அவர் என வினவியதும் உமர் என்றார்கள். நான் அதில் நுழைய நாடினேன். உமரே! உமது ரோஷத்தை நினைவு கூர்ந்து அதில் நான் நுழையவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும், உமருடைய இரண்டு கண்களும் கண்ணீரால் நிரம்பிவிட்டன அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்கள் மீதா நான் ரோஷம் கொள்வேன் என்றார்கள் உமர் (ரலி) அவர்கள். முஸ்லிம்)

சுவர்க்கத்தின் மாளிகைகள் தங்கம் வெள்ளி கற்களால் கட்டப்டிட்டிருக்கும் முத்துக்களும் மகரந்தங்களும் அதனுடைய சிறுகற்களாககும். அதன் மனம் குங்குமப் பூவாகும் அதில் நுழைந்தவர் சுபிட்சமாக இருப்பார். பீடைபிடித்தவராக மாட்டார். நிரந்தரமாக இருப்பார். மரணிக்கவேமாட்டார். அவரின் ஆடைகள் மக்கிப்போகாது, அவரின் இளமை அழியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: அபூஹுரைரா (ரலி)

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்த, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா. (47:15)

மிகக் குறைந்த பதவியுடைய சுவர்க்கவாசி

நபி மூஸா (அலை) அவர்கள் மிகக் குறைந்த பதவியுடைய சுவர்க்கவாசியைப்
பற்றி எனக்கு அறிவிப்பாயாக! என அல்லாஹ்விடம் கேட்டார்கள். அல்லாஹ் கூறினான்: சுவர்க்கவாசிகள் அனைவரும் சுவர்க்கத்தில் நுழைந்து முடிந்ததும் கொண்டுவரப்படும் ஒரு ஆள் அவர் ‘சுவர்க்கத்தில் நுழைவாயாக’ என்று கூறப்படும் அவர் இரட்சகா! மனிதர்கள் தங்களுககு்காண இடங்களில் தங்கிவிட்டார்களே அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டியவைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டார்களே! எப்படி நான் நுழைவது என்று கேட்பார்.

‘உனக்கு உலகத்தில் வாழ்ந்த அரசர்களில் ஒருவர் இருந்த வாழ்கை வசதி போன்று ஆக்கிக் கொடுத்தால் திருப்திபட்டுக் கொள்வாயா? என்று அல்லாஹ் கேட்பான். திருப்தி பட்டேன் என்று அவர் சொல்லுவார். உனக்கு அதுவும் அது போன்றதும் உண்டு என்று அல்லாஹ் கூறியவுடன் இரட்சகா! நான் பூரண திருப்தியை அடைந்து விட்டேன் என்று கூறுவார் (முஸ்லிம், திர்மிதி: முகீரா இப்னு ஹீஃபா (ரலி)

கடைசியாக சுவர்க்கம் பிரவேசிக்கும் சுவர்க்கவாசி

கடைசியில் சுவனம் புகுவர் ஒரு மனிதர் அவர் ஒரு தடவை நடப்பார் மற்றொரு தடவை (நரகில்) முகம்குப்பிற கீழேவிழுவார் நரகம் அவரை கரிக்கும். கடைசியாக அதைத் தாண்டி வந்ததும் நரகத்தின் பால் திரும்பிப் பார்த்து, உன்னிடமிருந்து என்னை காத்துக் கொண்ட அல்லாஹ் மிக உயர்ந்தவன் என்று அல்லாஹ் எனக்கு முன்னோர்கள் பின்னவர்கள் எவருக்கும் கொடுக்காத ஒன்றைக் கொடுத்தான் என்றும் (நரகத்தின் வேதனையிலிருந்து வெளியானதைப் பற்றி நினைத்து மகிழ்ச்சியில் இவ்வாறு) கூறுவார். ஒரு மரம் அவருக்கு உயர்த்திக் காட்டப்படும்;. இரட்சகா! இந்த மரத்தின்பால் என்னை நெருக்கமாக ஆக்கிவை. நான் அதன் நிழலில் இளைப்பாறிக் கொண்டும் அதன் நீரை குடித்துக் கொள்வேன். என்றும் கூறுவார். ஆதமின் மகன் இதைக் கொடுத்தால் அதுவல்லாத மற்றவைகளையும் கேட்கலாம் அல்லவா? என்று இறைவன் சொல்வான் இல்லை இரட்சகா நான் வேறு எதையும் கேட்கப் போவது இல்லை. என்று கூறுவான். அல்லாஹ்வும் அவன் சொல்படி அம்மரத்தின் பக்கம் அவரை நெருக்கி வைப்பான். அவன் மேலும் கேட்பான் என்பதை அல்லாஹ் அறிந்தே இருக்கிறான். அதன் பின்னர் வேறு ஒரு மரம் முன்னதைவிட அழகானதாக காட்டப்படும். அப்போது இரட்சகா! இதன் பால் என்னை நெருங்கச் செய் அதன் நீரைக்குடித்தும். அதன் நிழலில் இளைப்பாறியும் கொள்வேன். அதுவல்லாத வேறு எதனையும் நீ கேட்பதில்லை என்று முன்னர் என்னிடம் உடன்படிக்கை செய்யவில்லையா? என்று கேட்டு இப்போது இதன் பாலும் உன்னை நான் சேர்த்து வைத்தால் இதுவல்லாத மற்றொன்றையும் கேட்பாய் அல்லவா? என்று சொல்வான் ஆதமின் மகனே வேறு எதையும் நீ கேட்பதில்லை என்று முன்னர் என்னிடம் உடன்படிக்கை செய்யவில்லையா? என்று கேட்டு இப்போது இதன்பாலும் உன்னை நான் சேர்த்து வைத்தால் இதுவல்லாத மற்றொன்றையும் கேட்பாய் அல்லவா? என்று சொல்வான். வேறு எதையும் கேட்பதில்லை என்று உடன்படிக்கை செய்வான். பின்னர். சுவர்க்க வாயிலில் முன்னவை இரண்டைவிட அழகான மரத்தைக் காட்டப்படும் இரட்சகா! இதன் பக்கம் என்னை நெருக்கிவை என்று கூறுவான். சுவர்க்கம வாயில் பக்கம் அவனை நெருக்கி வைத்ததும் சுவர்க்காவாசிகளின் சப்தங்களை கேட்பான். அங்குள்ள உபசரணைகள் வசதிகள் கண்டு இரட்சகா! என்னை அதனுள் பிரவேசிக்கச்செய் என்று கூறுவான் ஆதமுடைய மகனே! (எனது அருட்கொடைகளை என்னிடம் கேட்பதிலிருந்து) உனக்கும் எனக்குமிடையில் எது தடையாக இருக்க முடியும்? என்று சொல்லி துன்யாவும் இன்னும் அது போன்றதும் உனக்கு கொடுத்தால் திருப்தி படுவாயா? என்ற அல்லாஹ் கேட்பான் இரட்சகா நீயே அகிலத்தாரின் இரட்சகன்! என்னை பரிகசிக்கின்றாயா? என்று கேட்பான். அல்லாஹ் இவனின் இந்த சொல்லைக் கேட்டு சிரித்துவிட்டு நான் உன்னை பரிகசிக்கவில்லை என்றும், நான் நாடியதின் மீது சக்தி பெற்றவன் என்று கூறுவான். (முஸ்லிம்: இப்னு மஸ்வூத் (ரலி)

சுவனத்தில் இறைவனைக் காணும் பாக்கியம்

சுவனவாழ்கையில் கிடைக்கும் எல்லாப் பாக்கியங்களை விட இறைவனைக் கானும் காட்சியே பெரிய பாக்கியம்.

சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் புகுந்து விடுவார்களானால் உங்களுக்கு இன்னும் அதிகமான ஒன்றை நீங்கள் நாடுகிறீர்களா? என்று அல்லாஹ் கேட்பான் இரட்சகனே! நீ எங்களின் முகங்களை வெண்மையாக்கவில்லையா? (இதைவிட வேறு எங்களுக்கு என்ன வேண்டும்?) என்று சொல்வார்கள். திரை அகற்றப்படும் (அல்லாஹ்வை காண்பார்கள்) தங்கள் இரட்சகனை காண்பதைவிட வேறொரு பிரியமான பொருளை அவர்கள் கொடுக்கப்படமாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதி: ஸுஹைப் (ரலி)
மறுமையில் பவுர்ணமி இரவன்று சந்திரனை நீங்கள் பார்ப்பதைப் போன்ற நீங்கள் உங்கள் இரட்சகனை பார்பீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)

சுவர்க்கத்தில் 1000 படித்தரங்களுண்டு ஒவ்வொன்றுக்கும் இடைபட்ட தூரம் வானம் பூமிக்கு இடைப்பட்ட தூரம் போல் இருக்கிறது. ஃபிர்தவ்ஸ் என்பதுதான் உயர்வான படித்தரமாகும். இதிலிருந்து தான் சுவர்க்கத்தில் 4 ஆறுகள் புறப்படுகின்றன. அதன் மேல் தான் அல்லாஹ்வின் அர்ஷு இருக்கிறது. நீங்கள் அல்லாஹ்விடம் துஆசெய்தால் ஃபிர்தவ்ஸையே கேளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: உபாதத் இப்னு ஸாமித் (ரலி)

என்னுடைய நல்லடியார்களுக்கு எந்த கண்ணும் (இதுவரை) கண்டிராத எந்த காதும் செவியுற்றிராத எந்த உள்ளத்திலும் தோன்றிடாதவைகளால் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு (32:17) வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி: அபூஹுரைரா (ரலி)
அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. 32:17

அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (55:56)

அவர்கள் வெண்முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள். (55:58)

ஹூர் (என்னும் அக்கன்னியர் அழிகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர் (55:72)

அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (55:74)

(அவர்கள்) பசுமையான இரத்தினக் கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். (55:76)

நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி, (56:35 )

அப்பெண்களைக் கன்னிகளாகவும், (56:36)

(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், (56:37)

வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). (56:38)

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: சுவனத்துப் பெண்களுடைய கால்களின் வெண்மை எழுபது ஆடைகளுக்கும் அப்பால் இருந்ததும் காணப்படக் கூடியதாக இருக்கும் (எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜையும் காணமுடியும். அவர்கள் பவளமும் முத்துமாக இருப்பார்கள். (திர்மிதி, இப்னு ஹிப்பான்:இப்னு மஸ்வூத் (ரலி)

நபி(ஸல்) அவர்கள்: சுவனத்தில் இறைவிசுவாசிகளுக்கு எத்தனையோ பெண்களுடன் உறவு கொள்ளும் ஆற்றல் வழங்கப்படும் என்ற போது நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இறைத்தூதரே! இது இயலுமா? என்று கேட்டனர், அதற்கு நபி (ஸல்) அவர்கள் (அன்று) நூறு பேர்களின் பலம் வழங்கப்படும் என்று கூறினார்கள். (திர்மிதி, இப்னுஹிப்பான்: அனஸ் (ரலி)

சுவனத்துப் பெண்களில் ஒரு பெண் இப்பூமியில் உள்ளவர்களுக்குக் காட்சி அளித்தால், சுவனத்துக்கும் பூமிக்கும் இடைப்பட்ட பகுதிகளைப் பிரகாசிக்கச் செய்வாள். அந்த இரண்டிற்கும் இடையே நறுமணம் வீசச் செய்வாள். அவள் தலையில் உள்ள முக்காடு இவ்வுலகையும், அதில் உள்ளவற்றையும் விடமேலானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, அஹ்மத்: அனஸ் (ரலி)