Friday, January 11, 2008

சிந்திக்க வேண்டிய நிகழ்வுகள்

கரு‌க்கலை‌‌ப்பு: 80,000 பேர் உ‌யி‌ரிழ‌ப்பு

இந்தியாவில் கரு‌க்கலை‌ப்பு செய்வதால் ஆ‌‌ண்டுதோறு‌ம் 80 ஆயிரம் பெண்கள் உயிரிழ‌ப்பதாகவு‌ம், இவர்களில் பெரும்பாலானோர் தவறான சிகிச்சையால் மரணம் அடைவதாகவும் இந்திய மகப்பேறு மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் ஹேமா திவாகர் தெரிவித்துள்ளார்.

தேவையற்ற கரு உருவாவதைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் எ‌ன்று‌ம் அவர் கூறியுள்ளார்.

பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா‌வி‌ல் கருவுறும் பெண்களில் 78 சதவீதம் பேர் திட்டமிடுவதில்லை என்றும், அதிலும் 25 சதவீதம் பேர் குழந்தை பெறுவதை விரும்புவ‌தில்லை என்றும் இதனா‌ல் ஆண்டுதோறும் 1 கோடியே 10 லட்சம் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதாகவும் ஹேமா கூறினார்.

போதிய அனுபவம் இல்லாதவர்கள் அளிக்கும் கருக்கலைப்பு சிகிச்சையால் ஆண்டுக்கு 80 ஆயிரம் பெண்கள் உயிரிழப்பதாக தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது வெளிவந்துள்ள அவசரகால கருத்தடை மாத்திரைகள் குறித்து ஒரு சதவீதம் பெண்களே தெரிந்து வைத்திருப்பதாக கூறிய அவர், அவசரகால கருத்தடை மாத்திரையை 72 மணி நேரத்திற்குள் சாப்பிட்டால், தேவையற்ற கருவைத் தவிர்க்க முடியும் என்றார்.

இத்தகைய மாத்திரைகளை எப்போதாவது ஒரு முறையோ அல்லது இரு முறையோ மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதையே தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் கூறினார்.


ஈராக்கில் 3 ஆண்டில் 1.5 லட்சம் பேர் உயிரிழப்பு

ஈராக்கில் அமெரிக்கா படையெடுப்பைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 51 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.

என்றாலும் இது சரியான கணக்கெடுப்பா அல்லது ராணுவத்தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை.

ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம், ஈராக்கில் வீடு வீடாகச் சென்று நடத்திய ஆய்வில் இந்த உயிரிழப்பு கணக்கிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவக்கத்தில் சுமார் 6 லட்சம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தெரிய வந்தது.

இந்த உயிரிழப்புகள் அனைத்தும் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்புகளில் ஏற்பட்டதாக் என்பது பற்றி தெரியவரவில்லை.

என்றாலும் அமெரிக்க அதிகாரிகள், ஈராக் பொதுமக்கள் மட்டும் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Saturday, 22 December 2007
நியூசிலாந்தில் மீண்டும் நிலநடுக்கம்
நியூசிலாந்து நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 4.8 ஆக பதிவாகியுள்ளது.

அந்நாட்டின் கிஸ்போர்ன் பகுதியின் வடகிழக்கு பகுதியில் இருந்து 30 கிமீ தூரத்தில், பூமிக்கடியில் 30 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து நேரப்படி காலை 11.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கடந்த 20ம் தேதி இரவு ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் சிக்கி 16 பேர் காயமடைந்த நிலையில், இன்றும் மீண்டும் அதே இடத்தில் பின்அதிர்வு காரணமாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த தொடர் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வணிகவளாகங்கள் உட்பட 123 மில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.