Monday, March 10, 2008

வரலாற்றில் சில உண்மைகள்

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்!
February 2, 2008

1 பிப்ரவரி 08 ‘திண்ணை’ இதழில் சில நீக்கங்களுடன் வெளியான கட்டுரை இது. தடித்த எழுத்தில் உள்ளவை நீக்கப்பட்ட பகுதிகள்.

***********
இந்திய சரித்திரம் எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த அரசர்களுள் ஒருவர் திப்பு சுல்தான். அவர் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் பிற மதத்தினருடன் நல்லிணக்கப் போக்கையே கடைப்பித்தார் என்பதும் சரித்திரத்தின் பக்கங்களில் பொறிக்கப் பட்டிருக்கிறது. அவர் தனது குடிமக்களை சாதி, மத அடிப்படையில் பாகுபடுத்தி வைத்திருக்கவில்லை. அவரது ஆட்சிக் காலத்தில் மதச் சண்டைகள் எதுவும் நிகழவில்லை.

சிதிலமடைந்திருந்த சாரதா கோயிலை மறுநிர்மானம் செய்வதற்காக சிருங்கேரி சங்கராச்சாரியார் பண உதவி வேண்டி திப்புசுல்தானுக்கு கடிதம் எழுதியபோது அதற்கு உடனடியாக பதிலளித்த அவர், கோயில் மறுநிர்மாணத்திற்கு வேண்டிய பொருளுதவிகளை தாராளமாக செய்தார். இதன் தொடர்பாக சங்கராச்சாரியாருக்கு திப்பு கன்னடத்தில் எழுதிய சுமார் 30 கடிதங்களில் அவர் இந்து மதம் மீதும் அதன் ஆன்மீகத் தலைவர்கள் மீதும் கொண்டிருந்த மதிப்பு வெளிப்படையாக தெரிகிறது.

சாரதா கோயில் மட்டுமின்றி, நஞ்சுங்கோட் தாலுக்காவிலிருக்கும் லட்சுமிகாந்தர் கோயில், மெல்கோட்டிலிருக்கும் நாராயணஸ்வாமி கோயில், ஸ்ரீகண்டேஸ்வரா கோயில், நஞ்சுண்டேஸ்வரா கோயில், சிரீரங்கப்பட்டணத்திலிக்கும் ரங்கநாதர் கோயில், என திப்புவிடமிருந்து நிதியோ பொருட்களோ பரிசாகப் பெற்ற கோயில்கள் பல இருக்கின்றன. இதில் ரங்கநாதர் கோயில் திப்புவின் மாளிகையிலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ளது. மேலும் இரண்டு கோயில்களும் திப்புவின் மாளிகைக்கு வெகு அருகிலேயே அமைந்திருந்தன. அவற்றில் தினமும் நடக்கும் பூஜை வழிபாடுகளுக்கு திப்புவிடமிருந்து எந்த இடையூறும் ஏற்பட்டதில்லை.

திப்புசுல்தானின் அரசவையில் இந்துக்கள் பலர் முக்கிய பதவிகளை பெற்றிருந்தனர். அவர்களை திப்பு மிக கண்ணியத்துடன் நடத்தினார். அவரிடம் அமைச்சராக இருந்த பூர்ணய்யா என்ற பார்ப்பனரை உதாரணம் காட்டி, ‘பார்ப்பனர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர்’ என்று சிலர் திப்புவிடம் புகார் செய்தபோது, மிகுந்த கோபமடைந்த அவர், குர்ஆனின் வசனம் ஒன்றை சுட்டிக் காட்டி ‘ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பழிக்கலாகாது’ என்று கண்டித்தார்.

ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்தே விரட்டிவிட வேண்டும் என்பதை தமது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருந்த அந்த வீரரைப் பார்த்து ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கினர். “ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்'’ என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதினார் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி. திப்புவை போரில் வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த அமைச்சர்கள் பூர்ணய்யா, மீர்சதக் ஆகியோரை ‘விலைக்கு வாங்கி’, அவர்களின் நம்பிக்கைத் துரோகத்தைக் கொண்டேதான் திப்புவை வென்றார்கள்.
சாதி மத பேதமின்றி, தனது குடிமக்களின் பெருத்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்த திப்பு சுல்தானின் பெருமையை எப்படியாவது குலைக்க வேண்டும் என்ற ‘அவசியம்’ ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. அதற்கு அவர்கள் கையாண்ட ஒரு வழிமுறைதான் வரலாற்று திரிபுவாதம்.

திப்புசுல்தான் இந்துக்களையும் கிருஸ்துவர்களையும் கொடுமைப் படுத்தினார் என உலவும் கதைகளுக்கு முக்கிய மூலவேர் பிரிட்டிஷ் நூலாசிரியர்களான கிர்க்பாட்ரிக், வில்க்ஸ் (W. Kirkpatrick, M. Wilks) போன்றவர்கள் எழுதிய நூல்களே. இவ்விருவரின் வரலாற்றுக் குறிப்புகள் நம்பகத்தன்மையற்றது என Brittlebank, Hasan, Chetty, Habib, Saletare மற்றும் பல வரலாற்றாசிரியர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். மேற்கண்ட இரு நூலாசிரியர்களுமே அன்றைய கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர்களிடம் பணி புரிந்தவர்கள். மேலும் திப்புவுக்கு எதிரான போர்களில் பங்கு கொண்டவர்கள். அப்போர்களில் ஆங்கிலேயப்படை அடைந்த தோல்வியை நேரில் கண்டவர்கள். திப்புவின் பெருமையை குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வரலாற்றுக் குறிப்புகள் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் இவர்கள் எழுதி வைத்த கட்டுக்கதைகளைத்தான் இன்றைய வரலாற்று திரிபுவாதிகளும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

“திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்” என்று எழுதுபவர் வேறு யாருமல்லர். முஸ்லிம்களை ‘துருக்கர்’ என்றும் ‘முகமதியர்’ என்றும் வெறுப்பை உமிழ்ந்து எழுதிச் சென்ற பார்ப்பனர் பாரதிதான். இதற்கு ஆதாரம் மேலே குறிப்பிட்ட இரு ஆங்கிலேயர்களின் நூல்களன்றி வேறு எதாக இருக்க முடியும்? மதநல்லிணக்கக் கொள்கையை கடைப்பிடித்தவர் திப்பு சுல்தான் என்பதற்கு ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல்கள் எவ்வளவோ இருக்க, உள்நோக்கத்துடன் ஆங்கிலேயர் பரப்பிய கட்டுக்கதைதான் பாரதியின் கண்ணில் பட்டது போலும். ஆங்கிலேயரை எதிர்த்தவர் எனப் புகழப்படும் பாரதி, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதில் அதே ஆங்கிலேயருடன் கைக்கோர்த்து ஓரணியில் நிற்கிறார் பாருங்கள்!
திப்புசுல்தான் மீது சுமத்தப்படும் மற்றொரு குற்றச்சாட்டு, முஸ்லிம்களாக மாறும்படி திப்பு வற்புறுத்தியதால் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது. தமது அரசவையில் பல பார்ப்பனர்களுக்கு உயர்பதவிகளை தந்து கவுரவித்தவரும் சங்கராச்சாரியாரின் வேண்டுகோளை ஏற்று கோயில் புணரமைப்பிற்கு நிதியுதவி செய்தவரும், பார்ப்பனர் ஒருவர் நம்பிக்கைத் துரோகம் செய்ததற்காக எல்லா பார்ப்பனர்களையும் பழிக்கலாகாது என்று சொன்னவருமான திப்பு சுல்தானைத்தான் அவ்வாறு குற்றம் கூறுகின்றனர். கொஞ்சமேனும் காமன்சென்ஸ் உள்ளவர்கள் இவற்றிலுள்ள முரண்பாட்டை புரிந்து கொள்வார்கள். கல்கத்தா பல்கலைகழக சமஸ்கிருத பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி என்ற பார்ப்பனர் இந்தச் ‘சம்பவத்தை’ தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டார். திப்புசுல்தான் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் ஹபீப் என்பவர் அவரை தொடர்பு கொண்டு இதற்கான ஆதாரத்தை கேட்டபோது, அது மைசூர் கெசட்டில் இருப்பதாக அவர் பதில் எழுதினார். பேராசிரியர் ஹபீப் மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு இந்த ‘ஆதாரம்’ பற்றி விசாரித்தபோது, ‘கெசட்டில் அப்படி ஒரு சம்பவமே குறிப்பிடப் படவில்லை’ என்று பதில் வந்தது. இதுதான் ஹரி பிரசாத் போன்றவர்கள் வரலாறு எழுதும் இலட்சணம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு இதையே பார்ப்பன எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு தமது ஜாதிப்பற்றை நிலைநாட்டிக் கொண்டார். அதற்கு சில வரலாற்று ஆய்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வரலாற்று சம்பவம் ஒன்றைப் பற்றி எழுதினால் அது ஆதாரப்பூர்வமானதா இல்லையா என்று ஒன்றுக்கு இரண்டு முறை நிச்சயம் செய்து கொள்ள வேண்டாமா? அறிவியலிலிருந்து ஆபாச சினிமா வரை எல்லா துறைகளிலும் கால் வைக்கும் சுஜாதாவிற்கு இந்த அடிப்படை தெரியாமல் போனதேன்?

மதுரையில் மன்னன் சுந்தரபாண்டியன் காலத்தில் நடந்த சைவ-சமண பிரிவினரிடையேயான மோதலைத் தொடர்ந்து எண்ணாயிரம் சமண முனிவர்களை உயிருடன் கழுவிலேற்றி கொன்ற மாபாதகத்தை செய்தவர்கள் ‘அன்பே சிவம்’ என்றோதுகிற சைவ சமயத்தார் தான். இது போன்ற ரத்த வரலாறுகளை மறக்கடிக்க முயலும் அதே வேளையில், சக மதத்தினரை சமமாக பாவித்து கண்ணியப்படுத்திய ஒரு அரசரின் பெயர் பொய்களாலும் புனைந்துரைகளாலும் களங்கப் படுத்தப் படுகிறது, அவர் ஒரு முஸ்லிமாக இருந்தார் என்ற ஒரு காரணத்திற்காகவே!
********************

வரலாற்று சம்பவங்களைப் பற்றி எழுதுபவர்களுக்கு இருக்க வேண்டிய மிக அடிப்படையான தகுதி எழுத்து நேர்மை! தான் எழுதிய வார்த்தைகளைப் பற்றி விளக்கம் கேட்கப்பட்டால் அதற்கான ஆதாரங்களைக் காட்டி விளக்க வேண்டிய கடமை அந்த எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. அவர் எழுதியது தவறு என்று நிரூபிக்கப் பட்டால் அதை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்ளும் மனப்பக்குவமும் அவர்களிடம் இருக்க வேண்டும். இதெல்லாம் இல்லாதவர்கள் வரலாற்று குறிப்புகளை எழுதுவதை விடுத்து வேறு ஏதாவது செய்யலாம்.
அன்றைய பாரதியும் இன்றைய சுஜாதாவும் அச்சு ஊடகங்களில் செய்ததை, திரிபுவாதமே நோக்கமாக கொண்ட சிலர் இணையப் பக்கங்களில் செய்து வருகின்றனர். கூலிக்கு மாரடிப்பவர்களைப் போல அற்ப பிரதிபலன்களுக்காக எதை வேண்டுமானாலும் எழுத தயாராக உள்ள அனாமதேயங்களும் இவர்களுள் அடக்கம். எதையாவது எழுதி வைப்பதும் அவற்றிற்கான விளக்கம் கோரப்படும்போதும் ஆதாரங்கள் கேட்கப்படும்போதும் ஓடி ஒளிந்து கொள்வதும் இவர்களின் அடையாளம். விளக்கமளிக்கப்படாத இவர்களின் வார்த்தைகள், தொடர்பற்ற சங்கிலி வளையங்களைப் போல இணைய வெளியில் சுற்றி வருகின்றன. அச்சு ஊடகங்களைப் போலன்றி, இணையத்தில் இவர்கள் பொய்களை உலவ விடும்போதெல்லாம் அதற்கான எதிர்ப்புகளும் உடனுக்குடன் இணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன. பதில் விளக்கங்கள்தான் வந்தபாடில்லை!

குஜராத் படுகொலைகளில் கொல்லப் பட்டவர்களின் ஆவிகள் நரேந்திர மோடியை இன்னும் விரட்டுவதாக கரண் தாப்பர் ‘Devil’s Advocate’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோடியை பேட்டி கண்டபோது குறிப்பிட்டார். ‘ஆவிகள்’ என அவர் குறிப்பிட்டது அந்தப் படுகொலைகள் தொடர்பாக மோடி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளையே! அந்த ‘ஆவி’களைப் போலவே இந்த இணைய திரிபுவாதிகளின் வார்த்தைகளும் இன்னும் இவர்களை விரட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்கான விளக்கங்கள் அளிக்கப்படும் வரை அவை விரட்டிக் கொண்டுதான் இருக்கும்.

நன்றி: திண்ணை

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்! - 2
February 15, 2008

காந்திஜி ‘யங் இந்தியா’ 23 ஜனவரி 1930 தேதியிட்ட இதழில் பக்கம் 31-ல் இப்படி எழுதுகிறார்;

‘மைசூரின் பதேஹ்அலி திப்பு சுல்தானைப் பற்றி வெளிநாட்டு வரலாற்றாளர்கள் மதவெறியர் என்றும் இந்து குடிமக்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார் என்றும் எழுதுகிறார்கள். ஆனால் அவர் அப்படிப் பட்டவரல்ல. அதற்கு நேர்மாற்றமாக அவர் இந்துக்களுடன் நல்லிணக்கத்தை கடைப்பிடித்திருந்தார். சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியாருக்கு திப்பு எழுதிய 30-க்கும் மேற்பட்ட கடிதங்கள் மைசூர் அரசின் தொல்பொருள் ஆய்வு நிலையத்தில் இருக்கிறது. அவை கன்னட மொழியில் எழுதப் பட்டவை. அவற்றில் ஒரு கடிதத்தில் திப்பு சங்கராச்சாரியாரின் கடிதம் தன்னிடம் கிடைக்கப்பெற்றதை தெரியப் படுத்தி, அவரை தனக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், மற்றும் உலக அமைதிக்காகவும் ஒரு யாகம் நடத்தச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நன்மக்கள் இருக்கும் இடத்தில்தான் மழை பெய்யும் என்பதைச் சொல்லி சிருங்கேரியிலிருந்த சங்கராச்சாரியாரை மைசூருக்கே திரும்ப வந்துவிடும்படியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவரது இந்தக் கடிதம் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.’

மேலும் ‘திப்பு சுல்தான் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் உருவாக்கம்‘ எனவும் காந்தி ‘யங் இந்தியா’வில் எழுதினார். விக்கிரக ஆராதனையாளர்களை தரைமட்டமாக்கி அழித்த, எட்டாயிரம் ஆண்கள், பெண்கள் ஆகியோரை சிறைப்படுத்திய, காபிர்களில் ஆண்கள் சிறுவர்கள் என பேதமில்லாமல் அனைவர் கழுத்துக்களுக்கும் தலையை சுமக்கும் பாரம் இல்லாமலாக்கிய ஒருவரைப் பற்றி காந்தி ஏன் இப்படி எதிர்மறையான கருத்தைச் சொல்ல வேண்டும்?
சாரதா கோவிலை மறுநிர்மாணம் செய்வதற்காக சிருங்கேரி மடத்திலிருந்து சங்கராச்சாரியார் திப்பு சுல்தானுக்கு கடிதம் எழுதினார். திப்பு சங்கராச்சாரியார் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரங்களாக அவர் எழுதிய கடிதங்கள் இன்னும் இருக்கின்றன. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தனது ‘Present Cresis of Faiths’ என்ற நூலில் குறிப்பிட்டார், ‘திப்பு பல சந்தர்ப்பங்களில் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடம் நாட்டு நலனுக்காக பூசைகள் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக, ஒருமுறை சங்கராச்சாரியாரின் வழிகாட்டுதல்படி சஹஸ்ர சண்டி ஜபம் நடத்தப்பட்டபோது திப்பு மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தார்.’ கோழிக்கோட்டில் உள்ள இந்துக்கள் அனைவரையும் இஸ்லாத்திற்கு கொண்டு வந்தது போதாமல் கொச்சியில் உள்ளவர்களையும் இஸ்லாமை தழுவச் செய்வது தன்னுடைய ஜிகாத் என்று அறிவித்த ஒருவருக்கு இந்துக்களின் ஆன்மீகத் தலைவரான சங்கராச்சாரியார் ஏன் கடிதம் எழுதினார்? இஸ்லாமிய மத வெறியரான ஒருவர் நாட்டு நலனுக்காக இந்துமத முறைப்படி யாகங்கள் செய்யும்படி ஏன் சங்கராச்சாரியாரிடம் கேட்டுக் கொண்டார்?

‘இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியதால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்’ என்று வரலாற்று புத்தகத்தில் எழுதிய ஹரி பிரசாத் சாஸ்திரி அதற்கு ஆதாரமாக மைசூர் கெசட்டை காட்டினார். ஆனால் மைசூர் கெசட்டை ஆய்வு செய்து அதன் புதிய பதிப்பை எடிட் செய்த பேராசிரியர் ஸ்ரிகந்தையா, ‘3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெசட்டில் எங்குமே குறிப்பிடப் படவில்லை. மைசூர் வரலாற்றை ஆய்வு செய்து வரும் ஒரு மாணவன் என்ற முறையில் நான் அடித்துச் சொல்வேன், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை‘ என்கிறார். மைசூர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஸ்ரிகந்தையாவின் கண்ணில் படாத ஒரு சம்பவம் கல்கத்தா பல்கலைக் கழக சம்ஸ்கிருத துறைத் தலைவரான ஹரி பிரசாத் சாஸ்திரி கண்ணில் எப்படி பட்டது?

இந்திய வரலாறு எந்த அளவிற்கு திரிக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு இவை மிகச்சிறிய உதாரணங்கள். வரலாற்றுத் திரிபுகளுக்கு மத்தியில் உண்மையைத் தேடுவது வைக்கோல் போருக்குள் ஊசியை தேடுவதை விட சிரமமானதாகியிருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் பெரும் சவாலாகவும் இருந்தவர் திப்பு சுல்தான். ‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73) என்ற நூலில் குறிப்பிடுகிறார் ஜவஹர்லால் நேரு. முதலாம் மற்றும் இரண்டாம் மைசூர் போர்களில் கடும் தோல்வியைச் சந்தித்த ஆங்கிலேயர், திப்புவை நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாது என்பதை புரிந்துக்கொண்டு அவர்களின் வழக்கமான ‘ஆயுதமான’ பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தினர். அன்று அவர்கள் விதைத்த விதை இன்றும் விஷ விருட்சமாக வளர்ந்து நின்று இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.
*************

‘பாண்டிய மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.’
-அ.பொன்னம்பலம், அப்பரும் சம்பந்தரும், சென்னை, 1983, Page 28
திப்புசுல்தான் பற்றிய ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை தனது கட்டுரையில் குறிப்பிட்ட பாரதி, மேற்கண்ட கொடுங்கோலனாகிய பாண்டிய மன்னனைப் பற்றியும் தனது கட்டுரைகளில் பிரஸ்தாபித்திருந்தாரென்றால் அவர் பொதுவாகவே அனைத்து மன்னர்கள் மேலும் ஆத்திரம் கொண்டவர் என்றும் அவரது எழுத்தில் நேர்மையும் யதார்த்தமும் இருக்கிறது என ஒப்புக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்கப் போவதில்லை.
***************

திப்பு சுல்தானுக்கு மிர்சதக் செய்த துரோகம் வரலாற்றில் குறிக்கப் பட்ட அளவிற்கு பூர்ணய்யாவின் துரோகம் குறிக்கப் படவில்லை. ஆனால் அவருக்கு இவர் சளைத்தவர் அல்ல. இவர்கள் இருவருமே ஆங்கிலேயருடன் இரகசியத் தொடர்பு வைத்திருந்து, திப்புவின் மரணத்திற்கும் அவரது சாம்ராஜ்யம் வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். திப்பு இறந்தச் செய்தி கேட்ட தருணத்திலேயே, பிரிட்டிஷார் பூர்ணய்யாவை சரணடையச் சொன்னபோது ‘காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை எங்கள் இனத்தை பாதுகாத்து வரும் உங்களிடம் சரணடைய எனக்கென்ன தயக்கம்?‘ என்று ஜெனரல் ஹாரிஸிடம் சொல்லிச் சரணடைந்தவர் பூர்ணய்யா. முதலில் ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கணப் பொழுதில் தன் நிலையை மாற்றிக் கொண்டவரை துரோகி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

‘திப்புவுக்கு எதிரான முதல் மூன்று போர்களில் ஆங்கியேரின் துப்பாக்கி சாதிக்காததை நான்காவது போரில் அவர்களின் பொன்னும் பொருளும் சாதித்தது. திப்புவின் அமைச்சர்கள் அவருக்கு துரோகம் இழைத்தனர். சரணடைய மறுத்த திப்பு வீரத்துடன் போரிட்டு மடிந்தார்’ என்று History of the Freedom Movement in India, (revised edn., Delhi, 1965, I, pp.226-27) என்ற நூலில் நூலாசிரியர் தாராசந்த் எழுதுகிறார். ‘திப்பு சுல்தானுக்கு துரோகம் இழைத்த பூர்ணய்யா ஒரு இந்து என்பதற்காக தான் வெட்கப்படுவதாக’ காந்தி ஒரு கட்டுரையில் எழுதியதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

நன்றி: திண்ணை
ஆதாரச் சுட்டிகள்:

யூசுப் கான் - கான் சாஹிப் - மருதநாயகம்
February 18, 2007

வரலாற்றுப் பக்கங்களிலிருந்து கிட்டத்தட்ட மறைந்து விட்ட ஒரு வீர காவியம் கான் சாஹிபுடையது. சத்ரபதி சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி போன்ற வரலாற்று நாயகர்களைப் பற்றி வரலாற்று புத்தகங்களைவிட திரைப்படங்கள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டிய காலச்சூழலில் நாம் வாழ்கிறோம். கான் சாஹிபிற்கு அந்தக் கொடுப்பினை(?) கூட (இதுவரை) இல்லை.

ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தனது தனித்திறமையினால் மதுரையின் மன்னராக ஆனவர் வீரர் கான் சாஹிப். ஆங்கில அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர் சில துரோகிகளின் சூழ்ச்சியினால் சிறைப்பிடிக்கப் பட்டு ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.
இவரது வாழ்வைப் பற்றிய சரித்திரக் குறிப்புகளில் சில சுவாரசியமான பக்கங்களை இனி பார்ப்போம்:

இவர் பிறப்பிலேயே முஸ்லிமா, அல்லது வேளாளர் குலத்தில் பிறந்து பிறகு முஸ்லிமாக மாறியவரா என்பதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. இதுபற்றி ‘மஹதி’ எழுதிய ‘மாவீரர் கான் சாஹிப்’ என்ற நூலில் ஆதாரங்களுடன் விளக்கப் பட்டிருக்கிறது.
கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்று சொல்லும் ஒரே ஒரு குறிப்பு எஸ்.ஸி.ஹில் என்பவர் எழுதிய “Rebel Commandant Yusuf Khan” என்ற நூலில் காணப்படுகிறது. 318 பக்கங்கள் கொண்ட அந்த நூல் கான் சாஹிப் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட பின் 150 ஆண்டுகள் கழித்து எழுதப் பட்டது. இந்த நூலாசிரியரிடம் ஓர் அரசாங்க அலுவலர், கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்றும், பெயர் மருதநாயகம் பிள்ளை என்றும், பின்னால் முஸ்லிம் ஆகி யூசுப்கான் என்ற பெயரை வைத்துக் கொண்டார் என்றும் தெரிவித்தாராம். அவர் தம் கூற்றுக்கு ஆதாரம் ஒன்றும் காட்டவில்லை. கான் சாஹிபின் வாழ்க்கையைக் கூறும் வேறு எந்த நூலிலும் இந்தக் குறிப்பு காணப்படவில்லை.

கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்து பிறகு முஸ்லிமாகியிருந்தால் அது அவர் வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான சம்பவமாகும். எங்கே முஸ்லிம் ஆனார், யாரால் முஸ்லிம் ஆக்கப் பட்டார் என்ற விபரங்கள் பிரபலமாகியிருக்கும். கான் சாஹிப் உயிர்த் தியாகம் புரிந்து 150 ஆண்டுகள் வரையும் யாரும் அதைப் பற்றி தெரிவிக்கவோ, எழுதி வைக்கவோ இல்லை. வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்பதற்குச் சான்றுகளும் இல்லை. யூசுப்கானோ, அவருடன் நெருங்கிப் பழகியவர்களோ, ஆற்காட்டு நவாபோ, ஆங்கிலேயரோ அவ்விஷயத்தைப் பற்றி குறிப்பிட்டதே இல்லை. கான் சாஹிபின் வரலாற்றை எழுதிய மற்றவர்களும் தெரிவிக்கவில்லை. ஆகையால் கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்பது கட்டுக் கதையாகும்.

மாறாக, அவர் பிறவி முஸ்லிம் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.
“கான் சாயபு சண்டை” என்ற நாட்டுப் பாடல் கான் சாஹிப் தூக்கிலிடப் பட்டவுடன் ஓர் இந்தியக் கவிஞரால் பாடப்பட்டது. அதில் கீழ்க்கண்டவாறு பாடப் பட்டிருக்கிறது.

“விகடமிடுவோர்கள் குலகாலன் - வெற்றி
விசைஆலிம் குலம் விளங்க வருதீரனான
ரதகஜதுரக படையாளன் - நல்ல
நடனமிகுபரு நகுலதுடி நிபுணகொடியான்”
இதிலிருந்து கான் சாஹிப் ஆலிம் குலவிளக்கு என்பது தெளிவாகிறது. (ஆலிம் = இஸ்லாமிய மார்க்க அறிஞர்). அந்தக் காலத்திலேயே வாழ்ந்த ஒரு கவிஞருக்குத் தெரிந்திராத ஒரு தகவலை 150 ஆண்டுகள் கழித்துப் பிறந்த அரசாங்க அலுவலர் எப்படி கண்டுபிடித்தாரோ தெரியவில்லை.
தவிர-
கான்சாஹிப் தூக்கிலிடப்பட்ட ஏழே நாட்கள் கழித்து ஆங்கிலேயர் ஒருவர், ஸ்காட்லாந்தில் இருந்த தம் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் கான் சாஹிப் ஆங்கிலேயருடன் வீரப் போராட்டம் நடத்தியதை குறிப்பிட்டுவிட்டு இறுதியில் எழுதியதாவது:

“கான் சாஹிப் ஒரு பிறவி முஸ்லிம்
Khan Sahib is by birth a moor and is descended from the ancient seed of the nation.”
இந்தக் குறிப்பும் எஸ்.ஸி.ஹில் எழுதிய நூலில் பக்கம் 286-ல் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
(Moor = The word was used more generally in Europe to refer to anyone of Arab or African descent).

இதனால் கான்சாஹிப் வேளாளர் குலத்தில் பிறக்கவும் இல்லை; பெயர் மருதநாயகம் பிள்ளையும் இல்லை என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒருவேளை இவர் மக்களால் போற்றப்பட்ட, மதுரையின் தலைவராக விளங்கியதால் ‘மதுரை நாயகம்’ என்று அழைக்கப்பட்டு, பின் பேச்சுவழக்கில் மதுரை என்பது மருதை என்று மருவி ‘மருதநாயகம்’ ஆகியிருக்கலாம்.
அல்லது கான்சாஹிபின் முன்னோர்களில் யாராவது மருதநாயகம் பிள்ளையாக வாழ்ந்திருக்கலாம். இந்திய முஸ்லிம்கள் அனைவரும் மதம் மாறியவர்களின் வழித்தோன்றல்கள்தாமே!
=======
ஆதார நூல்: ‘மாவீரர் கான் சாஹிப்’ - நூலாசிரியர்: ‘மஹதி’ - பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ்

சிலஆதாரசுட்டிகள்:
-தி ஹிந்து- ஆன்சர்ஸ்.காம்


Monday, January 28, 2008

மரணத்தின் வாசல் படியில்

அன்பர்களே / நண்பர்களே,

வாழ்வில் எதை எதையோ பிடிக்க அல்லது சாதிக்க வேகம் வேகமாய் சென்று கொண்டிருக்கின்றோம்.இந்த பூமி வாழ்க்கை மிகவும் சிறியதான ஒன்று. பிறந்தவர்கள் எல்லோருமே மரணிக்க கூடியவர்களாகவேஇருக்கின்றோம். மரணம் என்பது இந்த உலகில் யாரையும் விட்டு வைக்க போவதில்லை.

"ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா"

யாருக்கு எந்த வயதில் அல்லது எந்த பொழுதில், எந்த இடத்தில் அல்லது தருணத்தில்மரணம் வரும் என்றே சொல்ல முடியாது. அது எந்த சூழ்நிலையிலும் வரலாம். அப்படி ஒருவாழ்க்கைதான் இங்கே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அல்லதுஇயங்கி கொண்டிருக்கின்றோம். இந்த பதிவில் நான் கடவுளை பற்றி சொல்ல வரவில்லை. ஒவ்வொரு மனிதனும் தன் மரணத்தை அதிகம் அதிகம் நினைத்தாலே போதும், தன்னோட மனசில் ஒரு இரக்கம் தானாய் வளரும். பிறரை அன்பாய் பார்க்க தோன்றும். போலி கெளரவங்கள் தன்னிடமிருந்துதானாய் மறையும்.

மரணம் வரும் வேலை : கருவில் கலைந்த குழந்தை, இறந்தே பிறக்கும் குழந்தை, பிறந்த உடன் இறக்கும் குழந்தை,ஓரிரு வயதில் அறியாமல் ஏதேனும் எடுத்து திண்று அல்லது விழுங்கி, இறக்கும் குழந்தை. விபத்தில்பலியாகும் மனிதர்கள். இயற்கை சீற்றத்தில் அழியும் மனிதர்கள். ஒரு காரியத்தை செய்ய துவங்கிஅது முடிவடைவதற்குள் உயிர் பிரியும் தருணங்கள் (உணவு உண்ணும்போதோ, கழிவறையில் இருக்கும்போதோ,பயண ஆரம்பத்திலோ, இடையில் அல்லது முடிவில் மற்றும் தற்கொலை சாவுகள், கொலைகள் என்றுநாம் பார்த்த மரணங்களை அதிகம் அதிகம் பட்டியல் இடலாம்.

எந்த நேரமும் தனது மனதை சாந்தமாக அல்லது திருப்தியாக மேலும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள்.அதாவது நமது இன்றைய வாழ்வுவரை நாம் இந்த உலகில் எல்லாவற்றையும் நிறைவேற்றியவர்களாக இருக்கிறோம்.நமக்கு இந்த உலகில் கிடைக்க வேண்டிய எல்லாமே கிடைத்துவிட்டது. எல்லாவற்றையும் அனுபவித்துமுடித்துவிட்டோம் என்ற மனநிலையை உருவாக்கி கொள்ளுங்கள். இது ஏனெனில் நமது ஆத்மா, நாம்உயிரோடு இருக்கும்போதே சாந்தி பெறும், அமைதி பெறும் என்பதனால் இதை சொல்கிறேன்.

முக்கியமாக நான் சொல்ல வந்த செய்தி என்னவெனில் (மார்க்கம் சம்பந்தபட்ட கேள்வி / பதில் நிகழ்ச்சி ஒன்றில்ஒருவர் தனது வீட்டு குளியல் அறையில் அல்லது ஏதோ ஒரு தனிமையான இடத்தில் ஒரு மனிதன் ஆடையிட்டு கொண்டுதான் குளிக்க வேண்டுமா? அல்லது ஆடை இல்லாமல் (நிர்வாணமாக) குளிக்கலாமா?என்ற கேள்விக்கு, அந்த அறிஞர் அதற்கு பதில் தருகிறார். தனிமையான ஒரு அறையில், மறைவான ஒரு இடத்தில் ஆடை இல்லாமலும் குளிக்கலாம், அது ஒரு குற்றம் இல்லை. ஆனால் அந்த சமயம் மரணம்வந்து உங்களை தழுவி விட்டால் அல்லது இறக்க நேரிட்டால், கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.நமது உடலை (மானத்தை) இந்த உயிர் இருக்கும்வரை நாம் பாதுகாக்கிறோம். அதுபோல மரணத்திற்கு பிறகு நாம் நமது உடலை மறைத்திருப்பதும் ஓர் நல்ல விசயம் இல்லையா? ஆகவே எந்நேரமும் தனதுஉடலில் உடையை பேணுவது நல்லது.

இன்னொரு முக்கிய செய்தி அன்பர்களே, நம்மிடம் எது இருந்தாலும், இல்லாவிட்டாலும் நமது தொடர்புடையவீட்டு விலாசம், அலுவலக விலாசம், நமது தொடர்பில் (நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்கள்) தொலைபேசி எண்களை நம்முடன் எந்நேரமும் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். நாம் எந்த இடத்தில்இருந்தாலும் சரியே, நமக்கு தெரிந்த அல்லது தெரியாத எந்த ஒரு இடத்தில் இருந்தாலும், அவசர உதவிக்குநம்மிடம் நம்மை அடையாளம் காட்ட கூடிய, அவசரத்திற்கு அழைக்க கூடிய விலாசம் மற்றும் எண்கள்இருப்பது மிக மிக அவசியமான ஒரு நிலை ஆகும்.

Thursday, January 24, 2008

இஸ்லாம் கூறும் சுவனம்

என்னுடைய நல்லடியார்களுக்கு எந்தக் கண்ணும் (இதுவரை) கண்டிராத, எந்தக்காதும் செவியுறாத எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றிடாதவை யெல்லாம் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (3:133)

அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (32:17)

நோய், மரணம், முதுமை, பீடைகள் இல்லாத வாழ்வு

சுவர்க்கத்திற்குரியவர்கள் சுவர்க்கத்தின் உள்ளே புகுந்து விட்டால் நீங்கள் ஆரோக்கியத்தோடு வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது, எனவே நீங்கள் எப்போதும் இனி நோயுற மாட்டீர்கள். நீங்கள் நிரந்தரமாக ஜிவித்திருப்பதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டள்ளது. எனவே நீங்கள் எப்போதும் இனி மரணிக்கவே மாட்டீர்கள், நீங்கள் இளமையாகவே இருப்பீர்கள் என்பதை உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ள்ளது. எனவே நீங்கள் எப்போதும் இனி முதுமையை அடையமாட்டீர்கள். நீங்கள் பாக்கியங்கள் பெற்று சுகமாக வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி பீடை பிடித்தவர்களாக ஆகமாட்டிர்கள் என்று அழைப்பாளர் ஒருவர் அழைத்துக் கூறுவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: அபூஹுரைரா (ரலி))

சுவர்க்க வாயில்கள்

நிச்சயமாக சுவர்க்கத்திற்கு எட்டு வாயில்கள் உண்டு. எவர் தொழுகையாளியாக இருந்தாரோ அவர் தொழுகை வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் நோன்பாளியாக இருந்தாரோ அவர் நோன்புடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் தர்மம் செய்தவராக இருந்தாரோ அவர் தர்மத்துடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார். என்று கூறியதும் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த எட்டு வாயில்களிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா?’ என்று அபூபக்கர்(ரலி) கேட்டார்கள். ஆம், அவர்களில் நீரும் இருக்க ஆசிக்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மது, இப்னுமாஜா: ஸஹ்லுப்னு ஸஅத் (ரலி))

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்மோடு ஒப்பந்தம் செய்து வாழும் அந்நியன் ஒருவனை எவர் கொன்று விடுவாரோ அவர் சுவர்க்கவாடையை பெறமாட்டார். தங்கள் மேனிகளை மறைக்காமல் அறை குறை ஆடையில் நீர்வாணமாக உங்களை ஆட்டி அழைத்துச் செல்லும் பெண்கள் சுவர்க்க வாடையை பெறமாட்டார்கள்.
முதன் முதலாக சுவர்க்கத்தில் நுழைபவர்

நான் நபிமார்களை பின்பற்றுவோர்களை அதிகமாகக் கொண்டவன், சுவர்க்கவாசலை தட்டுவோரில் நானே முதன்மையானவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் மறுமை நாளில் சுவர்க்கத்தின் வாயிலுக்கு வந்து அதை திறக்க தேடுவேன். அப்போது யார் என்று என்னிடம் கேட்கப்படும், ‘முஹம்மது’ என்று சொல்லுவேன். உமக்கு முன்னால் நான் திறக்கக் கூடாது என்று உம் விஷயத்தில் நான் ஏவப்பட்டு இருந்தேன். என்று (அதன் பாதுகாவலர்) கூறுவார்.

சுவர்க்கவாசிகளின் இதயங்கள்

தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்; ”இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்” (இதற்கு பதிலாக, ”பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள். (7:43)

மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள். (15:47)

சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தின் நிலை

சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தினர் பவுர்ணமி இரவில் உள்ள முழுநிலவு போன்று இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தவர்கள் வானத்தில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் போன்று இருப்பார்கள். அதற்கு பின்னால் அங்கே பல படித்தரங்கள் உண்டு. மலம் கழிக்கமாட்டார்கள். சிறுநீர் கழிக்கமாட்டார்கள், முக்குச்சளி சிந்த மாட்டார்கள். எச்சில் துப்பமாட்டார்கள். அவர்களுக்கு சீப்பு தங்கத்தினால் ஆனதாகும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணமாகும். அவாகளுடைய குணங்கள் (ஒரே) நிலையில் இருக்கும். அவர்களுடைய பிதா ஆதமுடைய உடல், உயரம் போன்று அறுபது முழத்தில் இருப்பார்கள். அவர்களுக்கிடையே கோபதாபங்களோ, குரோதங்களோ இருக்காது, காலை மாலை நேரங்களில் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து கொண்டிருப்பார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி: அபூஹுரைரா (ரலி))

சுவர்க்கவாசிகளின் வரவேற்பு வார்த்தை

அல்லாஹ் ஆதமை அவருடைய வடிவத்தில் படைத்தான். அறுபது முழம் நீளமாக அவருடைய உயரம் இருந்தது. அவரை படைத்த போது அமரர்களின் ஒரு கூட்டத்தினரிடம் போய் ஸலாம் சொல்வீராக! அவர்கள் உமக்கு எதனை பதிலாக சொல்கிறார்கள் என்று கேளும். அப்பதிலே உமக்கும் உம்முடைய சந்ததியினருக்கும் முகமன் வார்த்தையாகும் என்று அல்லாஹ் கூறினான். அவர்களிடம் சென்று அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினார்கள். அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும வரஹமத்துல்லாஹி என்று ரஹ்மத்துல்லாஹி என்பதை அதிகமாக சொன்னார்கள். சுவர்க்கம் புகும் ஒவ்வொருவரும் ஆதமுடைய வடிவத்தில் அறுபது அடி உயரத்தில் இருப்பார்கள். குறைந்து. அறுபது முழம் உயரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மனித படைப்புகள் குறைந்து (ஆறு அடி உயரத்திற்கு ஆகிவிட்டார்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள். (78:35)

அதில் அவர்கள்; ”(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசுத்தமானவன்” என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். ”எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே” என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும் இருக்கும. (10:10)

சுவர்க்கவாசிகளுடைய பதவிகளின் வித்தியாசங்கள்

சுவர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உண்டு இரண்டு படித்தரங்களுக்கு இடையில் உள்ள வித்தியாசம் பூமிக்கும், வானத்திற்கும் இடையேயான வித்தியாசம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: உபாத துப்னு ஸாமித் (ரலி))

சுவர்க்க வாசிகள் தங்களுக்கு மேலே உயர்பதவியிலுள்ள குரஃப் வாசிகள். அவர்களுக்கிடையே உள்ள பதவி வித்தியாசம் காரணமாக மிகமிக உயரத்தில் கீழ்திசையிலோ அல்லது மேல் திசையிலோ மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரத்தை நீங்கள் பார்ப்பது போன்று பார்ப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த மாதிரியான உயர் பதவியுடைய இடம் நபிமார்களுக்கு உள்ள இடங்களாக இருக்குமோ, அவர்களைத் தவிர வேறு எவரும் அடைய முடியாதவையாக இருக்குமே என்று வினவினார்கள். இல்லை! என் ஆத்மா எவன் கையில் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக! எவர்கள் அல்லாஹ்வை விசுவாசித்து நபிமார்களை உண்மைப்படுத்தி வாழ்ந்தார்களோ அவர்களின் இடமாகும் என்றார்கள். (புகாரி, முஸ்லிம்;: அபூஸயீத் (ரலி))

சுவர்க்க வாசிகளுக்கிடையே, சந்திப்பு ஜியாரத் உண்டா? ஆம் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் கீழ்மட்டத்தில் இறங்கிவந்து முகமன் கூறி ஸலாம் கூறுவார்கள். கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் மேல் மட்டத்திற்கு செல்ல சக்தி பெறமாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் குறைவான அமல்கள் அவர்களை மேலே ஏற்றாது, தடுத்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சுவர்க்கத்தில் கோட்டைகள்

சுவர்க்கத்தில் ஒரு கோட்டையைப் பார்த்தேன் இந்தக் கோட்டை யாருக்கென்று நான் கேட்டேன். குரைஷியரில் உள்ள ஒரு வாலிபருக்கு என்று கூறினார்கள். யார் அவர் என வினவியதும் உமர் என்றார்கள். நான் அதில் நுழைய நாடினேன். உமரே! உமது ரோஷத்தை நினைவு கூர்ந்து அதில் நான் நுழையவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும், உமருடைய இரண்டு கண்களும் கண்ணீரால் நிரம்பிவிட்டன அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்கள் மீதா நான் ரோஷம் கொள்வேன் என்றார்கள் உமர் (ரலி) அவர்கள். முஸ்லிம்)

சுவர்க்கத்தின் மாளிகைகள் தங்கம் வெள்ளி கற்களால் கட்டப்டிட்டிருக்கும் முத்துக்களும் மகரந்தங்களும் அதனுடைய சிறுகற்களாககும். அதன் மனம் குங்குமப் பூவாகும் அதில் நுழைந்தவர் சுபிட்சமாக இருப்பார். பீடைபிடித்தவராக மாட்டார். நிரந்தரமாக இருப்பார். மரணிக்கவேமாட்டார். அவரின் ஆடைகள் மக்கிப்போகாது, அவரின் இளமை அழியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: அபூஹுரைரா (ரலி)

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்த, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா. (47:15)

மிகக் குறைந்த பதவியுடைய சுவர்க்கவாசி

நபி மூஸா (அலை) அவர்கள் மிகக் குறைந்த பதவியுடைய சுவர்க்கவாசியைப்
பற்றி எனக்கு அறிவிப்பாயாக! என அல்லாஹ்விடம் கேட்டார்கள். அல்லாஹ் கூறினான்: சுவர்க்கவாசிகள் அனைவரும் சுவர்க்கத்தில் நுழைந்து முடிந்ததும் கொண்டுவரப்படும் ஒரு ஆள் அவர் ‘சுவர்க்கத்தில் நுழைவாயாக’ என்று கூறப்படும் அவர் இரட்சகா! மனிதர்கள் தங்களுககு்காண இடங்களில் தங்கிவிட்டார்களே அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டியவைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டார்களே! எப்படி நான் நுழைவது என்று கேட்பார்.

‘உனக்கு உலகத்தில் வாழ்ந்த அரசர்களில் ஒருவர் இருந்த வாழ்கை வசதி போன்று ஆக்கிக் கொடுத்தால் திருப்திபட்டுக் கொள்வாயா? என்று அல்லாஹ் கேட்பான். திருப்தி பட்டேன் என்று அவர் சொல்லுவார். உனக்கு அதுவும் அது போன்றதும் உண்டு என்று அல்லாஹ் கூறியவுடன் இரட்சகா! நான் பூரண திருப்தியை அடைந்து விட்டேன் என்று கூறுவார் (முஸ்லிம், திர்மிதி: முகீரா இப்னு ஹீஃபா (ரலி)

கடைசியாக சுவர்க்கம் பிரவேசிக்கும் சுவர்க்கவாசி

கடைசியில் சுவனம் புகுவர் ஒரு மனிதர் அவர் ஒரு தடவை நடப்பார் மற்றொரு தடவை (நரகில்) முகம்குப்பிற கீழேவிழுவார் நரகம் அவரை கரிக்கும். கடைசியாக அதைத் தாண்டி வந்ததும் நரகத்தின் பால் திரும்பிப் பார்த்து, உன்னிடமிருந்து என்னை காத்துக் கொண்ட அல்லாஹ் மிக உயர்ந்தவன் என்று அல்லாஹ் எனக்கு முன்னோர்கள் பின்னவர்கள் எவருக்கும் கொடுக்காத ஒன்றைக் கொடுத்தான் என்றும் (நரகத்தின் வேதனையிலிருந்து வெளியானதைப் பற்றி நினைத்து மகிழ்ச்சியில் இவ்வாறு) கூறுவார். ஒரு மரம் அவருக்கு உயர்த்திக் காட்டப்படும்;. இரட்சகா! இந்த மரத்தின்பால் என்னை நெருக்கமாக ஆக்கிவை. நான் அதன் நிழலில் இளைப்பாறிக் கொண்டும் அதன் நீரை குடித்துக் கொள்வேன். என்றும் கூறுவார். ஆதமின் மகன் இதைக் கொடுத்தால் அதுவல்லாத மற்றவைகளையும் கேட்கலாம் அல்லவா? என்று இறைவன் சொல்வான் இல்லை இரட்சகா நான் வேறு எதையும் கேட்கப் போவது இல்லை. என்று கூறுவான். அல்லாஹ்வும் அவன் சொல்படி அம்மரத்தின் பக்கம் அவரை நெருக்கி வைப்பான். அவன் மேலும் கேட்பான் என்பதை அல்லாஹ் அறிந்தே இருக்கிறான். அதன் பின்னர் வேறு ஒரு மரம் முன்னதைவிட அழகானதாக காட்டப்படும். அப்போது இரட்சகா! இதன் பால் என்னை நெருங்கச் செய் அதன் நீரைக்குடித்தும். அதன் நிழலில் இளைப்பாறியும் கொள்வேன். அதுவல்லாத வேறு எதனையும் நீ கேட்பதில்லை என்று முன்னர் என்னிடம் உடன்படிக்கை செய்யவில்லையா? என்று கேட்டு இப்போது இதன் பாலும் உன்னை நான் சேர்த்து வைத்தால் இதுவல்லாத மற்றொன்றையும் கேட்பாய் அல்லவா? என்று சொல்வான் ஆதமின் மகனே வேறு எதையும் நீ கேட்பதில்லை என்று முன்னர் என்னிடம் உடன்படிக்கை செய்யவில்லையா? என்று கேட்டு இப்போது இதன்பாலும் உன்னை நான் சேர்த்து வைத்தால் இதுவல்லாத மற்றொன்றையும் கேட்பாய் அல்லவா? என்று சொல்வான். வேறு எதையும் கேட்பதில்லை என்று உடன்படிக்கை செய்வான். பின்னர். சுவர்க்க வாயிலில் முன்னவை இரண்டைவிட அழகான மரத்தைக் காட்டப்படும் இரட்சகா! இதன் பக்கம் என்னை நெருக்கிவை என்று கூறுவான். சுவர்க்கம வாயில் பக்கம் அவனை நெருக்கி வைத்ததும் சுவர்க்காவாசிகளின் சப்தங்களை கேட்பான். அங்குள்ள உபசரணைகள் வசதிகள் கண்டு இரட்சகா! என்னை அதனுள் பிரவேசிக்கச்செய் என்று கூறுவான் ஆதமுடைய மகனே! (எனது அருட்கொடைகளை என்னிடம் கேட்பதிலிருந்து) உனக்கும் எனக்குமிடையில் எது தடையாக இருக்க முடியும்? என்று சொல்லி துன்யாவும் இன்னும் அது போன்றதும் உனக்கு கொடுத்தால் திருப்தி படுவாயா? என்ற அல்லாஹ் கேட்பான் இரட்சகா நீயே அகிலத்தாரின் இரட்சகன்! என்னை பரிகசிக்கின்றாயா? என்று கேட்பான். அல்லாஹ் இவனின் இந்த சொல்லைக் கேட்டு சிரித்துவிட்டு நான் உன்னை பரிகசிக்கவில்லை என்றும், நான் நாடியதின் மீது சக்தி பெற்றவன் என்று கூறுவான். (முஸ்லிம்: இப்னு மஸ்வூத் (ரலி)

சுவனத்தில் இறைவனைக் காணும் பாக்கியம்

சுவனவாழ்கையில் கிடைக்கும் எல்லாப் பாக்கியங்களை விட இறைவனைக் கானும் காட்சியே பெரிய பாக்கியம்.

சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் புகுந்து விடுவார்களானால் உங்களுக்கு இன்னும் அதிகமான ஒன்றை நீங்கள் நாடுகிறீர்களா? என்று அல்லாஹ் கேட்பான் இரட்சகனே! நீ எங்களின் முகங்களை வெண்மையாக்கவில்லையா? (இதைவிட வேறு எங்களுக்கு என்ன வேண்டும்?) என்று சொல்வார்கள். திரை அகற்றப்படும் (அல்லாஹ்வை காண்பார்கள்) தங்கள் இரட்சகனை காண்பதைவிட வேறொரு பிரியமான பொருளை அவர்கள் கொடுக்கப்படமாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதி: ஸுஹைப் (ரலி)
மறுமையில் பவுர்ணமி இரவன்று சந்திரனை நீங்கள் பார்ப்பதைப் போன்ற நீங்கள் உங்கள் இரட்சகனை பார்பீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)

சுவர்க்கத்தில் 1000 படித்தரங்களுண்டு ஒவ்வொன்றுக்கும் இடைபட்ட தூரம் வானம் பூமிக்கு இடைப்பட்ட தூரம் போல் இருக்கிறது. ஃபிர்தவ்ஸ் என்பதுதான் உயர்வான படித்தரமாகும். இதிலிருந்து தான் சுவர்க்கத்தில் 4 ஆறுகள் புறப்படுகின்றன. அதன் மேல் தான் அல்லாஹ்வின் அர்ஷு இருக்கிறது. நீங்கள் அல்லாஹ்விடம் துஆசெய்தால் ஃபிர்தவ்ஸையே கேளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: உபாதத் இப்னு ஸாமித் (ரலி)

என்னுடைய நல்லடியார்களுக்கு எந்த கண்ணும் (இதுவரை) கண்டிராத எந்த காதும் செவியுற்றிராத எந்த உள்ளத்திலும் தோன்றிடாதவைகளால் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு (32:17) வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி: அபூஹுரைரா (ரலி)
அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. 32:17

அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (55:56)

அவர்கள் வெண்முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள். (55:58)

ஹூர் (என்னும் அக்கன்னியர் அழிகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர் (55:72)

அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (55:74)

(அவர்கள்) பசுமையான இரத்தினக் கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். (55:76)

நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி, (56:35 )

அப்பெண்களைக் கன்னிகளாகவும், (56:36)

(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், (56:37)

வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). (56:38)

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: சுவனத்துப் பெண்களுடைய கால்களின் வெண்மை எழுபது ஆடைகளுக்கும் அப்பால் இருந்ததும் காணப்படக் கூடியதாக இருக்கும் (எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜையும் காணமுடியும். அவர்கள் பவளமும் முத்துமாக இருப்பார்கள். (திர்மிதி, இப்னு ஹிப்பான்:இப்னு மஸ்வூத் (ரலி)

நபி(ஸல்) அவர்கள்: சுவனத்தில் இறைவிசுவாசிகளுக்கு எத்தனையோ பெண்களுடன் உறவு கொள்ளும் ஆற்றல் வழங்கப்படும் என்ற போது நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இறைத்தூதரே! இது இயலுமா? என்று கேட்டனர், அதற்கு நபி (ஸல்) அவர்கள் (அன்று) நூறு பேர்களின் பலம் வழங்கப்படும் என்று கூறினார்கள். (திர்மிதி, இப்னுஹிப்பான்: அனஸ் (ரலி)

சுவனத்துப் பெண்களில் ஒரு பெண் இப்பூமியில் உள்ளவர்களுக்குக் காட்சி அளித்தால், சுவனத்துக்கும் பூமிக்கும் இடைப்பட்ட பகுதிகளைப் பிரகாசிக்கச் செய்வாள். அந்த இரண்டிற்கும் இடையே நறுமணம் வீசச் செய்வாள். அவள் தலையில் உள்ள முக்காடு இவ்வுலகையும், அதில் உள்ளவற்றையும் விடமேலானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, அஹ்மத்: அனஸ் (ரலி)

மறுமை வாழ்க்கை (2)

மறுமை என்றால் என்ன?

இவ்வுலகவாழ்க்கை மிகக்குறுகிய காலத்திலேயே முடிவடைந்துவிடும். பிறப்பு, இளமை, வாலிபம், முதுமை மரணம் இவ்வளவுதான் வாழ்க்கை. இதில் பலர் இந்த பருவங்களை அனைத்தையும் கடந்துதான் மரணிப்பார்கள் என்று கூறமுடியாது. இப்படி நிலையற்ற வாழ்க்கைதான் இந்த உலக வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் மனிதன் எப்படி வாழ்கிறான், அவனைப்படைத்த இறைவன் அவனுக்கு கொடுத்தவாழ்க்கை முறையைப் பேணி கட்டுப்பட்டுள்ள குறுகிய வாழ்க்கைதான் இம்மை வாழ்க்கை (67:2, 11:7)

இந்த சோதனைக்கான முடிவுகள் உலகமக்கள் அனைவரையும் (முதல் மனிதர் முதல் உலகம் முடியும் வரை வரும் மக்கள் உலகம் முமுவதுமாக அழிந்த பிறகு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பி அவர்களின் செயல்களுக்குத் தக்கவாறு (வெற்றித் தோல்வி) முடிவுகள் அமையும். அம்முடிவு நிரந்தரமானதொன்று, மரணமற்ற மறுமை வாழ்வு.

மறுபிறவி நம்பிக்கை இஸ்லாத்தில் இல்லை. தான் செய்த செயல்களுக்குத் தக்கவாறு மறு பிறவிகள் எடுப்பதாகவும் மற்ற மதங்கள் கூறுவது அறிவியல் ரீதியாகவும், பகுத்தறிவு ரீதியாகவும் நிரூபிக்க, சரிகாண முடியாது. ஒரே வாழ்வு இம்மை மட்டும்தான் என்பதையும் ஏற்கமுடியாது.

மறுமை தேவை ஏன்

வாழ்நாள் முழுவதும் தவறான செயல்களைச் செய்பவன் தவறான வியாபாரம் செய்பவன் மக்களுக்கு தொல்லை தந்து விட்டு. சுகபோகமாக வாழ்ந்து மடிகிறான். அதற்குண்டான தண்டனை எப்படி? எப்போது? மறுமையில் தான்.
வாழ்க்கையை கட்டுப்பாடாகவும், முறையான வியாபாரம் மக்களுக்கு உதவி நேசத்தோடு வாழ்கிறான். அவன் இவ்வுலகவாழ்வில் கஷ்டமான வாழ்வு அவனுக்கு சுகபோகம் மறுமையில்தான்.

குற்றமற்றவன் தண்டனை அனுபவிக்கிறான். குற்றம் செய்தவன் தப்பித்துக் கொள்கிறான். சந்தர்ப்பம் சூழ்நிலை சாட்சியங்கள் அப்படி அமைந்து விடுகிறது. இதற்கு உண்மையான தீர்வு மறுமையில்தான்.

படுகொலைகள் பல செய்தவனுக்கும் ஒரே ஒரு கொலை செய்தவனுக்கும் மரணதண்டனை ஒருமுறை அதிக குற்றங்கள செய்தவன் அதற்குண்டான முழுமையான தண்டனையை அனுபவிக்க மறுமைதான். தனிமையில் பலகுற்றங்கள் செய்தவன் சாட்சியம் இல்லாதவன் தப்பித்துக் கொள்கிறான். தண்டனை மறுமையில்தான்.

பலசாலி ஒருவன் பலவீனனை தாக்கிவிட்டான் இவ்வுலகில் பழிதீர்க்க முடியவில்லை பழிதீர்ப்பது நீதி கிடைப்பது எப்போது மறுமையில்தான்.

இவ்வுலகில் குற்றங்கள் குறைய வேண்டும் மக்கள் சுபிட்சமாக வாழவேண்டும் ஒழுக்கங்களைப் பேண வேண்டும். நற்பண்புகளை கையாளவேண்டும். மனிதன் தான் பெற்றுள்ள பகுத்தறிவைப் பயன்படுத்தி மனிதனாக வாழவேண்டும் என்றால் மறுமை தேவை.

நாம் இவ்வுலகில் எவ்வளவு பெரிய ஆட்சி அதிகாரம் வல்லமை தன் தவற்றை மறைக்கும் திறமைப் பெற்றிருப்பினும் அண்ட சராசரங்களை அடக்கியாளும் சக்தி ஒன்று உள்ளது. அந்த சக்திக்கு பதில் சொல்ல வேண்டும். இம்மையில் இல்லையென்றால் மறுமையில் பதில் சொல்ல வேண்டும். என்ற பயம் இருந்தால்தான் மனிதன் மனிதனாக வாழ்வான். மீறுபவன் படிப்பவன் தண்டனைப் பொறுவான். கட்டுப்பட்டவன் நல்ல நிலைகளை அடைவான். அதற்குதான் மறுமை (10:4, 45:21,22)

உலக அழிவு (மறுமை) எப்படி ஏற்படும் 1) சூரியன் வெடித்து நாலாப்பக்கமும் சிதறும். அதன் நெருப்பு ஜுவாலைகளால் கிரகங்கள் பற்றி எரிந்து பூமியே பஷ்பமாகிவிடும். 2) சூரியன் தன் ஒளியிழந்து குளிர்ந்து போகும் இதனால் பூமி இருளடைந்து குளிரால் உறைந்து உதவாத தரிசு நிலமாகிவிடும். 3) ஒரு விண்மீன் சூரியன் மீது மோதி சேதப்படுத்தும் சாலையோரம் நின்ற அப்பாவி ஒருவன் விபத்தில் பலியாவது போன்ற நிலைதான் பூமிக்கும். 4) ஒரு வால் நட்சத்திரம் படுவேகமாக வந்து பூமிமீது பயங்கரமாக மோதித்தாக்கும். 5) புவிஈர்ப்பு சக்தியினால் சந்திரன் பூமிக்குமிக அருகில் ஈர்க்கப்படும். அதனால் பெரும் கடல் கொந்தளிப்புகள் ஏற்படுவதுடன். எரிமலைகள் வெடித்து பூமி அழிந்துவிடும். விஞ்ஞானம் கூறும் ஆய்வுகள்.

குர்ஆன் கூறும் உண்மைகள்


மறுமைநாளின் அதிர்ச்சி மகத்தானதாகும். பாலூட்டும் தாய், குழந்தையை
மறப்பார், கர்ப்பமுடையவள் சுமையை (கர்ப்பத்தை) வைத்து (ஈன்று)விடுவாள். மனிதர்கள் மதி மயங்கி கிடப்பார்கள். (22:1,2)

அந்நாளில் நிகழவேண்டியது நிகழ்ந்துவிடும் வானமும் பிளந்து அது பலமற்றதாக ஆகிவிடும். (69:15,16)

வானம் உருக்கப்பட்ட செம்பை போல ஆகிவிடும் இன்னும் மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும். (70:8,9)

பூமியும் மலைகளும் ஆட்டம் கண்டு மலைகள் சிதறி மண் குவியல்களாகிவிடும். (73:14)

நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும், வானம் பிளக்கப்படும், இன்னும் மலைகள் பறக்கடிக்கப்பட்டு விடும். (77:8,9,10)

சந்திரன் ஒளியிழந்துவிடும். சூரியனும், சந்திரனும் ஒன்றாக்கப்பட்டுவிடும். (75:8,9)

கடல்கள் தீ மூட்டப்படும்போது. (81:6)

நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது. (82:2)

மறுமை சாத்தியமில்லை என்று (காஃபிர்கள்) கூறுகிறார்கள்.

இன்னும்; ”(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப் போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களாக?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள். (17:49)

மேலும், அவர்கள்; ”நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?” என்று கேட்டுக் கொண்டு இருந்தனர். (56:47)

மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ”எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று. (36:78)

உயிர்ப்பிக்க முடியுமா

”நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?” என்றும் கேட்டான்.) (37:53)

இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை. (16:38)

உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) ”நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், ”இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை என்று நிச்சயமாகக் கூறுவார்கள். (11:7)

”மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?” (79:11)

(மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர்; ”அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (64:7)

ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும்…. (64:9)

மறுமை சாத்தியம்

அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும்; ”அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது… (7:187)
(நபியே!) நீர் கூறும்; ”நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள். (17:50)

”அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;” (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). ”எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?” என்று அவர்கள் கேட்பார்கள். ”உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!” என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். ”அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக! (17:51)

உங்களை (இறுதியில்) அவன் அழைக்கும் நாளில், நீங்கள் அவன் புகழை ஓதியவர்களாக பதில் கூறுவீர்கள்; (மரணத்திற்குப் பின்) சொற்ப(கால)மே தங்கியிந்ததாக நீங்கள் நினைப்பீர்கள். (15:52)

அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (75:4)

மறுமை நாளின் பெயர்கள்

யவ்முத்தீன் (1:4)
ஆஹிரா (2:85)
கியாமா (2:85)
தாருல் ஆஹிரா (2:94)
அஸ்ஸாசு (6:31)யவ்முல் ஹஸரத் (19:39)யவ்முல் பஅத் (39:56)
யவ்முல்ஃபஸ்ல் (37:21)
யவ்முத்தலாக் (40:15)
யவ்முல் ஹிஸாப் (40:27)
அல்வாகிஆ (56:1)
அல்ஹாக்கா (69:1-3)

கப்ர் அல்லது அடக்கஸ்தலத்தின் வாழ்க்கை

கப்ருடைய வாழ்கை

‘உங்களில் ஒருவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டால் அவரிடம் கரு நிறமான நீல நிறக் கண்களுடைய இரண்டு மலக்குகள் வருவார்கள். அவர்கள் முன்கர் என்றும் நகீர் என்றும் சொல்லப்படுவார்கள்’ அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் குறித்து அவனிடத்தில் ‘இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்’ என்று கேட்பார்கள். அவன் (மூமினாக இருந்தால்) ‘அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள்’ என்று கூறுவான். அப்பொழுது அந்த மலக்குள் அவனை நோக்கி நீ இவ்வாறு கூறுவாய் என்பதை ஏற்கெனவே நாம் அறிந்திருந்தோம் என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனுடைய கப்ரு எழுபது ழுழங்கள் விசாலமாக்கப்படும். பின்னர் அந்த கப்ரு ஒலியேற்றப்பட்டு பிரகாசமாக்கப்படும்.

அவனை நோக்கி ‘நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள். அவனோ அவர்களை நோக்கி என்னுடைய குடும்பத்திடம் நான் சென்று (எனக்குக் கிடைத்துள்ள இந்நற் பாக்கியத்தை) அறிவித்து விட்டு வர என்னை விட்டு விடுங்கள் என்ற கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் ‘மிக விருப்பத்துக்குரிய ஒருவரேயன்றி வேறெவரும் எழுப்பாதளவுள்ள மணமகனின் உறக்கமாக நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள். அன்றுமுதல் மறுமை நாள் வரை அவன் உறங்கிக் கொண்டே இருப்பான்.
முனாபிக் ஒருவனிடம் கேள்வி கேட்கும் போது, ‘மக்கள் ஏதேதோ சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் (இப்பொழுது எதுவும்) எனக்குத் தெரியாது’ என்று கூறுவான். அபபொழுது அந்த மலக்குகள் அவனை நோக்கி ‘நீ இவ்வாறே பதிலளிப்பாய் என்பதை ஏற்கனவே நாம் அறிந்து வைத்திருந்தோம்’ என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனை நெருக்குமாறு பூமிக்கு உத்தரவிடப்படும். அவனுடைய (வலது இடது) விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ளுமளவு அவனை நெருக்கும். அவனை அந்த இடத்திலிருந்து அல்லாஹ் எழுப்புகின்ற நாள்வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: அபூஹுரைரா (ரலி))

கப்ரு ஒரு நபித்தோழரைக் கூட நெருக்கியது

கப்ரு என்பது எந்த ஒரு மனிதனையும் இலகுவாக விட்டுவிடாது. அல்லாஹ்வுடைய உத்தரவுப்படி வேதனைகளை அது அளிக்காமல் விட்டு விடாது. கப்ரில் ஒருவனுக்கு மீட்சி கிடைத்து விட்டால் அவனுக்கு மறுமையில் மீட்சி கிடைத்தது போன்றதாகும். நபித் தோழர்களில் நபியவர்களுக்கு மிக விருப்பத்துக்குரிய ஒரு தோழரான ஸஃது (ரலி) அவர்களின் ஸக்ராத்துடைய நிலை நமக்குப் படிப்பினையூட்டக் கூடியதாய் அமைந்துள்ளது.

ஸஃது (ரலி) அவர்கள் அகழ்யுத்தத்தின் போது கடுமையாகக் காயமுற்று நோயுற்றிருந்தார்கள். அவருடைய வீடு சற்று தூரத்திலிருந்ததால் அடிக்கடி அவரை நோய் விசாரிக்கச் செல்ல நபி அவர்களுக்கு சிரமமாயிருந்தது அடிக்கடி சென்று அவரைப் பார்ப்பதற்காக, அவருக்கென்று மஸ்ஜிதுந் நபவிக்கு அருகில் வீடொன்று அமைத்துக் கொடுக்குமாறு நபியவர்கள் தமது தோழர்களைப் பணித்தார்கள். அவ்விதம் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அதன் பின்னால் நபியவர்கள் அடிக்கடி அவரைப் பார்த்து வந்தார்கள். ஒரு நாள் இரவு நடு நிசியில் ஜிப்ராயீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘வானத்திலும் பூமியிலும் உள்ளவர்களைக் கவலையடையச் செய்யக் கூடியதாக ஒருவர் மரணித்து விட்டார். அதனையிட்டு அல்லாஹ்வுடைய அர்ஷ்க்கூட நடுங்குகிறது’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் ஸஃது (ரலி) அவர்களிடம் சென்று பார்த்த போது அவர் இறந்திருக்கக் கண்டார்கள்.

மறுநாள் அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டு, கப்ரினுள் வைக்கப்படுவதைப் பார்த்து கொண்டிருந்த நபியவர்கள் திடீரென ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றார்கள். நபித்தோழர்களும் ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றனர். சற்று நேத்தில் ‘அல்லாஹுஅக்பர்’ என்று நபியவர்கள் கூறினார்கள். நபித் தோழர்களும் அவ்விதமே கூறினார்கள். இவ்விருவார்தைகளாலும் ஆச்சிரியமடைந்த நபித் தோழர்கள் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டு முடிந்ததும் ‘யாரஸுலுல்லாஹ்’ வழக்கத்துக்கு மாறாக இன்று கவலையுடன் ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றும், மீண்டும் சந்தோஷத்துடன் ‘அல்லாஹுஅக்பர்’ என்று கூறினீர்கள் இதன் காரணம் என்ன? என்று கேட்டார்கள்.

அப்பொழது நபிவர்கள் ‘ஸஃது (ரலி) கப்ரினுள் வைக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, கப்ரு அவரை நெருக்குவதைக் கண்ணுற்றேன். அப்பொழுது கவலையுடன் ஸுப்ஹானல்லாஹ் என்றேன். அதனைத் தொடர்ந்து கப்ரு அவரை நெருங்குவதை விட்டு அவருக்க இடம் கொடுத்தது. அப்பொழுது அல்லாஹுஅக்பர்’ என்றேன் என்று கூறிவிட்டு ஒவ்வொரு கப்ரும் ஒவ்வொரு மனிதனையும் நெருக்காமல் விட்டு விடாது அதிலிருந்து ஒருவர் மீட்சி பெற முடியுமென்றிருந்தால் ஸஃது மீட்சி பெற்றிருப்பார் என்று கூறினார்கள். (அஹமது, நஸயீ: ஜாபிர் (ரலி)

‘நிச்சயமாக ஒவ்வொரு கப்ரும் நெருக்கக் கூடியதாய் இருக்கின்றது. அதிலிருந்து ஒருவன் மீட்சி பெறமுடியும் என்றிருந்தால் ஸஃது மீட்சி பெற்றிருப்பார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹமத்: ஆயிஷா (ரலி)

நபியவர்களுடைய கனவில் தோன்றிய கோரக் காட்சிகள்

‘கடந்த இரவு கனவில் என்னிடம் இருவர் வந்து என்னை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றனர். அவர்கள் செல்லும் வழியில் நானும் நடந்தேன். அவ்வழியில் ஒருவன் சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் ஒருவன் பெரிய கல்லொன்றை வைத்து கொண்டு நின்று கொண்டிருந்தான். அவன் அதனைப் படுத்துக் கொண்டிருந்தவனின் தலையில் போட்டான். அதனால் அவனுடைய தலை தகர்ந்து தூள்தூளானது. அந்த கல் உருண்டு கொண்டு போகவே அதனைத் தொடர்ந்து அம்மனிதன் சென்று அதைத்தூக்கி கொண்டு, தான் நின்ற இடத்துக்கே வந்து சேர்ந்தான். அப்போது சிதைதிருந்த தலை மீண்டும் பழைய நிலைக்கு வந்து நன்றாக இருந்தது. மீண்டும் மீண்டும் அவ்விதமே அந்த வேதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது’ இதனைக் கண்ணுற்ற நான் என்னச் அழைத்துச் சென்றவர்களிடம் ‘ஸுப்ஹானல்லாஹ்!’ இவர்கள் யார்? என்ற ஆச்சர்யத்துடன் கேட்டேன் அவர்கள் என்னை நோக்கி நடந்து வருமாறு கூறினார்கள்.

நான் அவர்களுடன் நடந்தேன். அப்பொழுது மல்லாந்து படுத்துக் கொண்டிருந்த ஒருவனுக்கருகில் சென்றோம். அவனுக்கருகில் முன் பக்கம் வளைந்த கம்பியைப் போட்டுப் பிடரி வரை கிழித்தார். பின்மூக்குத் துவாரத்தில் கம்பியைப் போட்டுப் பிடரிவரைகிழித்தார். பின்னர் ஒரு கண்ணில் அதனைப் போட்டுப் பிடரிவரை கிழித்தார். அதனைத் தொடர்ந்து அவனுடைய முகத்தின் மறுபக்கத்தையும் அவ்வாறே கிழித்தார். இப்பக்கத்தைக் கிழித்து முடிய அப்பக்கம் மீண்டும் பழையபடி நல்லநிலையை அடைந்திருந்தது இவ்விதமே தொடர்ந்து அந்த வேதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது நான் ‘ஸுப்ஹானல்லாஹ்’ இவர்கள் யார்? என்று கேட்டேன். அதற்கவர்கள் தொடர்ந்து நடக்குமாறு எனக்குக் கூறினார். நாங்கள் நடந்தோம்.

அப்பொழுது அடுப்பு போன்ற ஓரிடத்துக்குச் சென்றோம். அதன் தோற்றம் (கிணறு போன்று) ஆழமான ஒரு பொந்தாக இருந்தது. அதன் மேற்பாகம் நெருக்கமானதாகவும் கீழ்பாகம் அகண்டதாகவும் இருந்தது. அதனுள்ளிருந்து பயங்கர சத்தம் வெளியாகிக் கொண்டிருந்துது. அதனுள்ளளே எட்டிப்பார்தோம். ஆடையெதுமின்றி ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக இருந்தனர். அதனுள்ளிருந்து நெருப்பு சுவாலை விட்டு எரியும் போது, உள்ளிருப்பவர்கள் (நீரில் மிதப்பது போன்று) மிதந்து வருகின்றனர். அந்தப் பொந்திலிருந்து அவர்கள் வெளியேறிவிடக் கூடியளவு மேல் மட்டத்துக்கு வருகின்ற போது நெருப்பு அணைந்து, மீண்டும் அடித்தளத்துக்கே சென்று விடுகின்றனர்.

இந்த வேதனையும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருந்தது, அதனைக் கண்ணுற்றதும் அவர்கள் யார்? என்று கேட்டேன். அப்பொழுதும் அவர்கள் என்னை நடக்குமாறு கூறினார்கள்.

பின்னர் இரத்த நிறமான நதியொன்றுக்கருகில் சென்றோம். அந்த நதியில் ஒருவன் நீந்திக் கொண்டிருந்தான். மற்றொருவர் நதி ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அவருடைய காலுக்கருகில் கற்கள் நிறைந்திருந்தன. நீந்திக் கொண்டிருந்தவன் கரைவந்து சேருகின்ற போது நின்று கொண்டிருந்தவர். ஒரு கல்லை அவனுடைய வாயினுள் போட்டுவிடுகிறார். அவன் கல்லை விழுங்கிக்கொண்டு மீண்டும் நீந்திச் செல்கிறான். மீண்டும் கரைக்கு வருகிறான். இந்த வேதனையும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருந்தது.

நான் கண்ட காட்சிகளுக்கு, என்னுடன் வந்த இருவரிடமும் இறுதியில் விளக்கம் கேட்டபோது ஒன்றின்பின் ஒன்றாக விளக்கமளித்தார்கள்.

கல்லினால் தலை தகர்க்கப்பட்டவன். அல்குர்ஆனைப் படித்தான். ஆனால் அதன்படி அவனது வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை. பர்ளான தொழுகையைத் தொழாமல் உறங்கிவிட்டான்.

வலமும் இடமுமாக முகம் கிழிக்கப்பட்டவன் காலையில் வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றால் (தனது வயிற்றுப் பிழைப்புக்காக) பொய் சொல்லுவதையே வழக்கமாக்கிக் கொண்டான்.

பொந்தினுள் கண்ட நிர்வாணிகளான ஆண்களும், பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள்.

இரத்த நிறமான நதியொன்றில் நீந்திக் கொண்டு கற்களை விழுங்கிக் கொண்டிருந்தவன் வட்டி உண்டவன்.

நபி (ஸல்) அவர்கள் தமது கனவை மேற்கண்டவாறு சொன்னார்கள். பர்ஸகுடைய உலகில் நடைபெறும் இவ்வாறான வேதனைகள் மறுமை நாள் வரை நடைபெறும் என்றும் கூறினார்கள். (புகாரி: ஸமுரா இப்னு ஜீன்துப் (ரலி))

கப்ரிலுள்ள பாவிகளுக்கு காலையும், மாலையும் நரகம் காட்டப்படுகிறது.

கப்ருடைய வேதனையின் போது பாவிகளுக்குக் காலையும், மாலையும் நரகம் காட்டப்படும் என்பதை பிர்அவ்னுடைய கூட்டத்தை ஆதாரமாக் காட்டி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

பிர்அவ்னுடைய ஜனங்களைத் தீய வேதனை சூழ்ந்து கொண்டது காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுவார்கள். மறுமை நாளிலோ ‘பிர்அவ்னுடைய ஜனங்களைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் (என்று கூறப்படும்)’ (40: 45-46)

சூரிய வெப்பம் கடுமையாகிக் கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி வந்தார்கள். அப்பொழுது ஒரு சப்தத்தை அவர்கள் செவி தாழ்த்திவிட்டு, யூதர்கள் (சிலர்) தமது கப்ருகளின் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிக்கிறார்கள் (அதுதான் இந்த சப்தம்) என்று கூறினார்கள். (புகாரி: அய்யூப் (ரலி)

ஒரு யூதப் பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தபோது கப்ருடைய வேதனைபற்றிக் கூறிவிட்டு ‘அல்லாஹ் உம்மைக் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்பானாக!’ என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) நபியவர்களிடம் கப்ருடைய வேதனைப்பற்றி வினவினார்கள். அதற்கு நபியவர்கள் ‘ஆம் கப்ருடைய வேதனை உண்டு’ என்று பதிலளித்தார்கள்.

‘அதன் பின்னர் நபியவர்கள் எந்த ஒரு தொழுகை தொழுத போதிலும் கப்ருடைய வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தோடாமலிருக்க நான் கண்டதில்லை’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (புகாரி: ஆயிஷா (ரலி))

பாதுகாப்பு கப்ர் வேதனை

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் நான்கு வகையான சோதனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடமலிருந்ததில்லை அதில் முதலாவதாக கப்ருடைய வேதனையிலிருந்தே பாதுகாவல் தேடினார்கள். அந்த துஆ பின்வருமாறு.

‘அல்லாஹ்வே! கப்ருடைய வேதனை, நரக வேதனை வாழ்கையில் மரணத்தின் போதும் ஏற்படக்கூடிய சோதனை, தஜ்ஜாலுடைய வருகையால் ஏற்படக்கூடிய சோதைனை ஆகியவற்றிலிருந்து’ உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். (புகாரி: அபூஹுரைரா (ரலி)

கப்ர்

கப்ரு என்பது மறுமையின் தங்குமிடங்களில் முதலாவது இடமாகும். அதிலிருந்து ஒருவன் மீட்சி பெறுவானென்றால் அதற்குப் பின்னாலுள்ள அனைத்தும் இலகுவாகிவிடும். அதிலிருந்து அவன் மீட்சிபெறவில்லையென்றால் அதற்குப் பின்னாலுள்ள அனைத்தும் அவனுக்குக் கடினமாகி விடும். என்றும் கப்ருடைய காட்சிகளை விடமிகமிக மோசமான எந்த ஒரு காட்சியையும் நான் கண்டதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன் என்றார்கள். (திர்மிதி, இப்னுமாஜா: உத்மான் (ரலி)

‘எவன் தன்னைத் தானே கேள்வி கேட்டு (விசாரனை செய்து) கொண்டு மரணத்துக்குப் பின்னாலுள்ள தனது வாழ்வுக்காக இவ்வுலக வாழ்வை அமைத்துக் கொள்கிறானோ, அவனே புத்திசாலியாவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா : ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி)

இந்த நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு உமர் (ரலி)அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். ‘நீங்கள் (கப்ரிலும் மறுமையிலும்) விசாரணை செய்பப்படுவதற்கு முன்னால் உங்களை நீங்களே விசாரணை செய்து கொள்ளுங்கள். ஒரு பொழுது விசாரனைக்காக நீங்கள் நிறுத்தப் படுவதற்கு முன்னால் உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ளுங்கள். அவன் இம்மையிலும் தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்கிறானோ, அவனுக்கே மறுமை விசாரனை இலகுவாக அமையும்’ (திர்மிதி: உமர் (ரலி)

இம்மைக்கும் மறுமைக்கும் இடைபட்ட பர்ஸக் வாழ்வு

இம்மைக்கும் மறுமைக்கும் இடைப்பட்ட பர்ஸக் வாழ்வு!

(நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்களில் எவனுக்கேனும் மரணம் வந்து விட்டாலோ (அவன் தன் இறைவனை நோக்கி) என் இறைவனே! என்னை (உலகுக்கு)த் திருப்பி அனுப்பி விடு. நான் விட்டு வந்து அ(ந்த உலகத்)தில் (இனிமேல்) நற்காரியங்களையே செய்து கொண்டிருப்பேன் என்று கூறுவான். (எனினும் அது நடக்கக் கூடிய காரியம்.) அன்று (இத்தகைய சந்தர்ப்பத்தில்) அவன் கூறக்கூடியது வெறும் வார்த்தையே (அன்றி வேறில்லை) அவர்களுக்கு முன் அதில் (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரையில் ஒரு பர்ஸக் உண்டு. (23:99,100)

ஒரு அடியான் கப்ரினுள் வைக்கப்பட்ட பின் அவனுடைய தோழர்கள் திரும்பி வருகின்ற போது அவர்களுடைய பாதணிகளின் சப்தத்தைக் கூட அவன் செவியுறுவான். அப்போது அவனிடம் இரண்ட மலக்குகள் வந்து (பல கேள்விகள் கேட்பார்கள். அதன் தொடரில் நபி (ஸல்) அவர்களைக் குறித்து) இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்லுகிறாய்? என்று கேட்பார்கள். ஒரு மூமினைப் பொறுத்த வரையில் அக்கேள்விக்கு ‘அவர் அல்லாஹ்வுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள். என நான் சாட்சி கூறுகிறேன்’ என்று கூறுவான். அப்பொழுது அவனை நோக்கி ‘நரகில் உனக்குத் தரப்படவிருந்த இடத்தைப்பார் அவ்விடத்துக்குப் பகரமாக உனக்கு சுவர்க்கத்தில் ஓரிடம் தரப்படுகிறது’ என்று கூறப்படும். அப்பொழுது (சுவர்க்கம், நரகம் ஆகிய) அவ்விரண்டையும் அவன் காண்பான்.

முனாபிக், காபிர் இருவரையும் நோக்கி (நபி (ஸல்) அவர்களைக் குறித்து இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்லுகிறாய் என் கேட்கப்படும். ‘அவரைப் பற்றி மக்கள் ஏதேதோ சொல்லுவதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன் (அது என்னவென்று இப்பொழுது) எனக்குத் தெரியாது, நான் அது பற்றி அறியவுமில்லை’ என்று கூறுவான்.

அப்பொழுது அவன் இரும்புச் சம்மட்டியால் அடிக்கப்படுவான். ஒவ்வொரு அடியின் போதும் அவன் எழுப்புகின்ற ஓசையை மனிதனையும், ஜின்களையும் தவிர (பூமியிலுள்ள) எல்லா உயிரினனங்களும், செவிமடுக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்: அனஸ் (ரலி)

உலகம் அழிவதற்கு முன் ஏற்படும் பத்து அடையாளங்கள்

உலகம் அழிவதற்கு மிக நெருக்கத்தில் ஏற்படும் பத்து அடையாளங்களை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

1. வானத்திலிருந்து வெளிப்படும் புகை மண்டலம்
2. தஜ்ஜால் வருகை
3. மனிதனுடன் பேசும் பிராணி வருகை
4. சூரியன் மேற்கிலிருந்து உதித்தல்
5. ஈஸா(அலை) வானத்திலிருந்து இறங்குதல்
6. யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வருகை
7. கிழக்கே ஒரு பூகம்பம்
8. மேற்கே ஒரு பூகம்பம்
9. அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10. எமன்; நாட்டிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு
இது பத்து அடையாளங்களும் உலகம் அழியும் மிக நெருக்கமான கட்டத்தில் ஏற்படுபவை.
ஹதீஸ்

நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும் அதற்கு
அடுத்தவர்கள் அடுத்ததாகவும் (உயிர்) கைப்பற்றப்படுவர் (இவ்வாறு நன்மக்கள் மறைந்தபின் இப்பூமியில்) மட்டமான பேரீத்தம் பழத்தையும், வாற்கோதுமையையும் போன்ற தரம் தாழ்ந்தவர்களே எஞ்சி இருப்பர். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்த மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, அஹ்மத், தாரமீ: மிர்தாஸ் (ரலி))
நிச்சயமாக அல்லாஹ் கல்வியை அடியார்களிடமிருந்து ஓரோடியாகப் பறித்துவிட மாட்டான் ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலம் அவன் கல்வியைக் கைப்பற்றுவான் கடைசியாக ஒரு அறிஞர் கூட மீதமில்லாமல் ஆகிவிடும். மக்கள் அறிவீனர்களைத் தமது தலைவர்களாக்கி கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத்தீப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழிகெட்டு(ப்பிறரையும்) வழிகெடுப்பார்கள், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத், தாரமி: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி))

ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! மறுமை எப்போது நிகழும்? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் ‘அமானிதம் பாழடிக்கப்பட்டால் மறுமையை எதிர்பார்ப்பீராக! என்றார்கள், மீண்டும் அவர் அது எப்படி பாழடிக்கப்படும் என வினவ நபியவர்கள், தகுதியற்றவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கப்படும் போது (அது பாழடிக்கப்படுகிறது)’ என்று பதிலுரைத்தார்கள். (புகாரி: அபூஹுரைரா (ரலி))
கல்வி குறைந்து விடுவதும், அறியாமை அதிகரிப்பதும், விபச்சாரம் பெருகுவதும், மது அருந்தும் பழக்கம் அதிகமாவதும், 50 பெண்களை ஒரு ஆண் நிர்வாகிக்கும் அளவுக்கு ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகரிப்பதும் மறுமையின் அடையாளங்களில் உள்ளதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்: அனஸ் (ரலி))

(உங்களில்) ஹர்ஜ் அதிகமாகும் வரை மறுமை நிகழாது என நபி(ஸல்) கூறியபோது (ஹர்ஜ்) என்றால் என்ன? என நபித்தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபி ஸல்) அவர்கள் அதுதான் கொலை என்று இரண்டு முறை கூறினார்கள். (முஸ்லிம்: அபூஹுரைரா(ரலி))

நில நடுக்கம் அதிகரிக்கும், நேரங்கள் சுருங்கும், குழப்பங்கள் வெளிப்படும், கொலை பெருகும் இன்னும் சொல்வதானால் உங்களிடம் பொருட்கள் அதிகரித்து (அதையாரும் தீண்டாமல்) கொட்டிக் கிடக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்: அபூஹுரைரா (ரலி))
காலம் சுருங்கும் வரை அந்த (மறுமை) நாள் ஏற்படாது (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போல் ஆகும். ஒரு நாள் அன்று ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒருமணி நேரம் ஒர விநாடி போல் ஆகும். (திர்மிதி: ).தஜ்ஜால் வெளிப்படுவான், மேற்கிலிருந்து சூரியன் உதிக்கும், புகை மூட்டம் ஏற்படும், யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வெளிப்படும். ஈஸா (அலை) இறங்கி வருவார்கள். மேற்கில் ஒரு நிலச்சரிவு, கிழக்கில் ஒரு நிலச்சரிவு, அரபு தீபகற்பத்தில் ஒரு நிலச்சரிவு ஏற்படும் கடைசியாக. எமனிலிருந்து ஒரு தீப்பிழம்பு புறப்படும் மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்க்கும், பூமியிலிருந்த பேசும் பிராணி வெளிப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: அபூஹுரைரா (ரலி)

சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, தஜ்ஜால், அதிசயப்பிராணி ஆகிய மூன்று அடையாளங்கள் தோன்றிவிடுமானால் அவற்றிற்க்கு முன்பே ஈமான் கொண்டிருந்தால் தவிர ஈமான் பயனளளிக்காது

Wednesday, January 23, 2008

இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம் வேறுபாடுகள் (1)


இறைவெளிப்பாட்டின் அடிப்படையில் சமுதாயத்தை வழிநடத்திய இறைதூதர்கள் மற்றும் அவர்களுக்கு அருளப்பட்ட இறைவசனங்களின் தாக்கத்தை உட்கொண்ட ஒரு நூலே பைபிள் என்பதில் முஸ்லிம்களுக்கு மாற்று அபிப்பிராயம் இல்லை. இறைவசனங்களும் தீர்க்கதரிசிகளின் உபதேசங்களும் வரலாற்றாசிரியர்களின் அபிப்பிராயங்களும் புரோகிதக் கருத்துக்களும் சேர்ந்த ஒரு கலவையே பைபிள்.

தீர்க்கதரிசிகளின் வாழ்க்கைப் புராணங்கள் பைபிளின் முதுகெலும்பு எனலாம். இந்த வாழ்க்கைப் புராணங்களின் மேல் புரோகிதக் கருத்துக்களைப் பொதிந்து உருவாக்கப்பட்டதே இன்று நடைமுறையில் உள்ள பைபிள் என்று கூறினால் வியப்படையத் தேவையில்லை. பைபிளில் காணப்படும் பல வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் திருக்குர்ஆனில் உள்ள தகவல்களை ஒப்ப அமைந்திருப்பதைக் காணலாம். பைபிளில் காணப்படும் அத்தகைய தகவல்கள் இறைவசனங்கள், கண்ணால் கண்ட காட்சிகள் மற்றும் பிறர் கூறக் கேட்ட கருத்துக்களின் அடிப்படையில் பிற்கால எழுத்தாளர்களால் பதிவுசெய்யப்பட்டவை ஆகும்.

புரோகிதர்களின் மனித அபிப்பிராயங்கள் பைபிளில் மலிந்து காணப்படுவதால் முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களும், அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களும் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றது.

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள வரலாற்றுத் தகவல்கள் இதிலிருந்து முற்றிலும் வேறபட்டுள்ளது. அது அருளப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை எந்த மனிதக் கரங்களாலும் மாசுபடாமல் அதன் பரிசுத்தத் தன்மையிலேயே நிலைத்திருக்கின்றது. எனவே அது கூறும் வரலாற்றுத் தகவல்கள் முற்றிலும் உண்மையானவையகவும் முரண்பாடுகளற்றவையாகவும் பரிபூரணத் தன்மை வாய்ந்ததாகவும் நிலைத்து நிற்கின்றன. எனவே திருக்குர்ஆனில் எந்த முரண்பாடுகளையும் விமர்சகர்களால் கூறமுடியாது. அவ்வாறு விமர்சித்தாலும் சான்றுகளின் துணையோடு அவற்றை நிரூபிக்க இயலாது என்பதே உண்மை.

இறைவசனங்களின் தாக்கம் உள்ள பைபிளிலும் இறைவசனங்களை மட்டுமே கொண்ட திருக்குர்ஆனிலும் வரலாற்றுத் தகவல்கள் அடிப்படையில் ஒன்றாகத் தோன்றினாலும் அவற்றை விளக்கும் தொனியில் இரண்டிற்கு மத்தியிலும் பாரிய வேறுபாடுகள் நிலவுகின்றன.

இத்தகைய வேறுபாடுகள் திருக்குர்ஆன் இறைவாக்கு என்பதை உண்மைப் படுத்துவதோடு பைபிள் மனிதக் கற்பனைகளின் கலவை என்பதையும் நிரூபிக்கின்றன. சில உதாரணங்களைக் கொண்டு இதனை நிரூபிப்போம். 1. இறைக் கொள்கை மற்றும் இறைவனைப் பற்றிய தகவல்கள்.திருக்குர்ஆனில் இறைவனைக் குறித்துக் கூறப்படும் தகவல்கள் யாவும் அவனது வல்லமையையும் மகத்துவத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.

ஆனால் பைபிளில் பல இடங்களிலும் இறைவனின் மகத்துவத்திற்குக் களங்கம் ஏற்படும் வகையில் கருத்துக்கள் அமைந்துள்ளன. யஹோவாவின் பகத்துவம் பற்றிக் கூறினாலும் இஸ்ரவேலிய இனஉணர்வின் தாக்கங்கள் வரும் இடங்களில் இறைவனின் மகத்துவத்தைச் சிறுமைப் படுத்தும் விதத்தில் கருத்துக்கள் காணப்படுகின்றன. உதாரணமாக ஆதியாகமம் 1:26 மனிதனை தனது சாயலில் இறைவன் உருவாக்கினான் என்று கூறி மனிதனுக்கு இறைவனை ஒப்பாக்கி தரம் தாழ்த்துகின்றது. ஆதியாகமம் 2:23 கடவுள் ஓய்வு எடுத்தார் என்ற தகவலைக் கூறி களைப்பும் ஓய்வும் உடைய இறைவனை பைபிள் அறிமுகப்படுத்துகின்றது.

ஆதியாகமம் 3:8 முதல் 13 வரை ஏதேன் தோட்டத்தில் ஒளிந்துகொண்ட ஆதாமையும் ஏவாளையும் கடவுள் தேடி அலைந்தார் என்று கூறி முற்றிலும் பரிபூரணமடைந்த அவனது ஞானத்தைக் களங்கப்படுத்துகின்றது. தான் செய்து விட்ட காரியத்திற்காக வருத்தப்படும் கடவுள் என்ற ஆதியாகமம் 6:6ல் கூறப்பட்டுள்ள தகவல் பின்விளைவை அறியாதவனாக இறைவனைச் சிறுமைப் படுத்துகின்றது.

தான் முன்னரே தீர்மானித்து உறுதிப்படுத்திய ஒரு காரியத்தைச் செய்யாமல் மனம் மாறிவிட்ட தெய்வத்தைப் பற்றி யாத்திராகமம் 32:14 கூறுகின்றது.
இஸ்ரவேல் இனத்தின் பிதாவாகிய யாக்கோபுடன் மல்யுத்தம் நடத்தி இறைவன் தோற்றுவிட்டதாக ஆதியாகமம் 32:28 கூறுகின்றது. மேலும் இஸ்ரவேல் இன உணர்வின் ஆதிக்கம் பைபிளில் மேலோங்கியுள்ளது என்பதற்கு மேற்படி வசனம் ஒரு சான்றாகும்.

ஆனால் திருக்குர்ஆனில் இப்பேரண்டத்தின் படைப்பாளனும் ஆட்சியாளனும் ஆகிய அல்லாஹ்வைப் பற்றி எடுத்துக் கூறும் இடங்களில் அவனது மகத்துவத்திற்கோ வல்லமைக்கோ களங்கம் கற்பிக்கும் எந்தக் குறிப்புகளும் இல்லை. மாறாக இறைவனைக் குறித்த தகவல்கள் யாவும் அவனது வல்லமையையும் மகத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதுடன் அவற்றைப் படிப்பவர்களின் இறைநம்பிக்கையையும் பயபக்தியையும் அதிகப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. அல்லாஹ்வாகிய அவ்விறைவன் அரபிகளுக்கு மட்டும் உள்ள இறைவனாகத் திருக்குர்ஆன் அவனைக் குறித்து அறிமுகப்படுத்தவில்லை.

திருக்குர்ஆன் அறிமுகப்படுத்தும் இறைவன் அரபிகளையும் அரபியல்லாதவரையும் இன நிற வேறுபாடின்றி அனைவரையும் படைத்தவன், அகில உலகத்தாரின் இரட்சகன்.

சில வசனங்கள். அல்லாஹ் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் உயிரோடிருப்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன். அவனை சிறுதுயிலோ, உறக்கமோ பீடிக்கா. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியது. (அல ல2:255)

இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும் உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (6:3)வானங்களையும் பூமியையும் படைத்தவன் அவனே;

உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான் அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன்ää பார்ப்பவன். (42:11)

நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும்ää அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112: 1-4)

2. தீர்க்கதரிசிகளின் வரலாறுவரலாற்றுத் தகவல்களைப் பொறுத்தவரை விவரிக்கும் விதம் தெய்வீகத் தன்மை ஆகியவற்றில் பைபிளும் திருக்குர்ஆனும் முற்றிலும் வேறுபடுகின்றது. முதலாவதாக ஆதிபிதாவாகிய ஆதமுடைய வரலாற்றைப் பற்றி பைபிள் மற்றும் திருக்குர்ஆன் தரும் தகவல்களைக் காண்போம்.

1. ஆதமிடமும் அவரது மனைவியிடமும் உண்ணக் கூடாது என்று விலக்கப்பட்ட கனியானது நன்மை தீமை குறித்து அறிவிக்கக் கூடிய கனி என்று பைபிள் கூறுகின்றது.

(ஆதி 2:17)பைபிளின் கூற்றுப்படி விலக்கப்பட்ட கனியைப் புசித்ததன் காரணமாகவே மனிதனுக்கு நன்மை தீமைகளைப் பற்றிய அறிவு கிடைக்கின்றது. (ஆதி 3:6,7 3:22) (கனியைப் புசிப்பதற்கு முன் நன்மை தீமைகளைப் பிரித்தறியாத நிலையில் இருந்த மனிதனிடம் விலக்கப்பட்ட கனியைப் புசிக்க வேண்டாம் என்று எவ்வாறு கட்டளையிட முடியும் ? ஏவல் விலக்கல்களெல்லாம் நன்மை தீமையைக் குறித்து அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதல்லவா உண்மை ? இதன் காரணமாகவே விலங்கினங்களிடம் ஏவல் விலக்கல்கள் செல்லுபடியாவதில்லை என்பதை கவனத்தில் கொள்க.)

ஆனால் திருக்குர்ஆன் விலக்கப்பட்ட கனியைக்குறித்து பேசும் இடத்தில் அது நன்மை தீமைகளைப் பிரித்தறிவிக்கும் அறிவின் கனி என்று குறிப்பிடவில்லை. நன்மை புரிந்து உயர்நிலை அடையக்கூடிய அல்லது தீமை புரிந்து இழிநிலை அடையக்கூடிய நிலை இயற்கையாகவே மனுதனின் படைப்பில் அமைந்துள்ளது என்ற உண்மையை திருக்குர்ஆன் எடுத்தியம்புகின்றது. நன்மை தீமைகளைக் குறித்த அறிவு விலக்கப்பட்ட கனியைப் புசிப்பதற்கு முன்னரே இறைவனால் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு அதனால் ஒவ்வொரு பொருளையும் பிரித்தறிந்து அதன் தன்மைகளுக்கு ஏற்ப பெயரிட்டு அழைக்கக் கூடிய ஒரு உன்னதமான ஒரு படைப்பாகவே திருக்குர்ஆன் மனிதனை அறிமுகப்படுத்துகின்றது.

(2:30-33) விலக்கப்பட்ட கனியையும் நன்மை தீமைகளைப் பிரித்தறிதலையும் எந்த இடத்திலும் திருக்குர்ஆன் சம்மந்தப்படுத்தவே இல்லை.

2. விலக்கப்பட்ட கனியைப் பற்றிய இறைவனின் கட்டளையை பைபிள் எடுத்துக் கூறும்போது '' அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்'' (ஆதி 2:17) என்று ஆதமிடம் கர்த்தர் கூறியதாகக் குறிப்பிடுகின்றது.

ஆனால் இறைக் கட்டளைக்கு மாறு செய்யத் தூண்டிய சர்ப்பமோ ''நீங்கள் நன்மை தீமையை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்று (ஆதி: 3:5) கூறியது. அவவாறு விலக்கப்பட்ட கனியை உண்டபோது ஆதம் சாகவில்லை. மாறாக சர்ப்பம் கூறியது போன்று நடந்தது.

(பார்க்க. ஆதியாகமம்: 3:6,7 3:22)இறைவன் பொய் கூறி ஆதமை பயமுறுத்தினான் என்றும் பாம்பு ஆதமுக்கு உண்மையை எடுத்துக் கூறியது என்றும் இக்கதை மூலம் விளங்க முடிகின்றது. இவ்வாறு இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் கற்பிக்கும் கதைகள் திருக்குர்ஆனில் இல்லை.

3. நன்மை தீமைகளைப் பகுத்துணரும் அறிவு தரும் கனியைப் புசித்த மனிதனைப் பற்றிய அச்சத்தால் மனிதன் தன்னைப் போல் ஆகாதிருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் பலவீனமானவனாக இறைவனை பைபிள் காட்டுகின்றது. (ஆதி 3:22)விலக்கப்பட்ட கனியைப் புசித்தன் காரணமாக இறைதன்மை மனிதனிடம் ஊடுருவி விட்டதாக எந்த இடத்திலும் திருக்குர்ஆன் கூறவில்லை. இவ்வாறு இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் ஏற்படுத்தும் இக் கதைகளை விட்டும் திருக்குர்ஆன் பரிசுத்தமானது!

4. விலக்கப்பட்ட கனியை உண்ணுமாறு மனிதனைத் தூண்டியது பாம்பு (சர்ப்பம்) என்று பைபிள் கூறுகின்றது. (ஆதி 3:1-5, 3:13) இதன் காரணமாகவே பாம்பு இறைவனின் சாபத்துக்கு ஆளாகியது என்றும், அச்சாபத்தின் காரணமாகவே அது தன் வயிற்றினால் (ஊர்ந்து) சஞ்சரிக்கிறது என்றும், அதன் காரணமாகவே மனிதனுக்கும் பாம்புக்கும் பகை ஏற்பட்டது என்றும் பைபிள் கூறுகின்றது.

(2:35,36)ஆனால் திருக்குர்ஆனோ மனிதனை வழிகெடுத்து அவனைச் சுவனத்திலிருந்து வெளியேற்றியவன் ஷைத்தான் என்று கூறுகிறது. (2:35,36) இச்சம்பவத்தைப் பற்றி திருக்குர்ஆன் குறிப்பிட்டுக்காட்டும் எந்த இடத்திலும் பாம்பைப் பற்றிய தகவல் இல்லை. இறைசாபத்தின் காரயமாகவே பாம்பு வயிற்றினால் ஊர்கின்றது என்பதும் அச்சாபத்தின் காரணமாகவே அது மனிதனால் வெறுக்கப்பட்டது என்பதுவும் உண்மையாயின் இறைசாபத்துக்கு முன் உள்ள பாம்பு எந்த நிலையில் இருந்தது ? கால்களால் நடந்து சென்றதா ? மனிதனால் விரும்பப்பட்டதா? இது குறித்த எந்த விளக்கமும் பைபிளில் இல்லை.

5. விலக்கப்பட்ட கனியை உண்டதோடு அதனை உண்ணத் தூண்டியவள் பெண், இதன் காரணமாக அவள் இறைவனால் சபிக்கப்பட்டு அச்சாபத்தின் காரணமாகவே பெண்ணுக்கு கற்பகால சிரமங்களும் பிரசவ வேதனையும் ஏற்படுகின்றது என்று பைபிள் (ஆதி 3:16) கூறுகின்றது. இன்றுவரை தாய்மார்கள் அனுபவித்து வரும் கற்பகால சிரமங்களுக்கும் பிரசவவேதனைக்கும் ஆதிமாதாவின் பாவம் காரணமாம் ? (அப்படியாயின் மனிதனல்லாத இதர ஜீவிகள் அனுபவிக்கும் பிரசவ வேதனைக்கு யார் செய்த பாவம் காரணமாம்?)தாய்மார்களுக்கு ஏற்படும் பிரசவ வேதனை பாவத்திற்காக வழங்கப்பட்ட தண்டனை என்று திருக்குர்ஆன் கூறவில்லை. மாறாக அதனை ஓர் அருட்கொடையாகவே குறிப்பிடுகின்றது.

தாயின் தியாகத்துக்கு எடுத்துக்காட்டாக அச்சம்பவத்தைக் குறிப்பிடுகின்றது. (29:8, 46:15, 31:14) இதன் காரணமாகவே மனிதன் தனது தாய்க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும் எனவும் கட்டளையிடுகின்றது. விலக்கப்பட்ட கனியையும் கற்ப காலசிரமங்கள் மற்றும் பிரசவ வேதனையையும் திருக்குர்ஆன் எந்த இடத்திலும் சம்மந்தப்படுத்தவே இல்லை.

6. மனிதனுடைய உழைப்பு, பொருளீட்டல், விவசாயம் போன்றவை எல்லாம் விலக்கப்பட்ட கனியை உண்டதன் காரணமாக ஏற்பட்ட சாபம் என்று பைபிள் (ஆதி 3:18,19) ஆனால் திருக்குர்ஆன் உழைப்பு, பொருளீட்டல் எல்லாம் மனிதனின் திறமையை வெளிப்படுத்தும் அருட்கொடை என்று கூறுகின்றது. (62:10) (இதன் காரணமாகவே குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கி ஒரு ஆண்மகனை கண்ணியப்படுத்துகின்றது (4:34)) மனிதனின் கடின உழைப்பையும் முயற்சியையும் எந்த இடத்திலும் விலக்கப்பட்ட கனியுடன் திருக்குர்ஆன் தொடர்பு படுத்தவில்லை.

7. விலக்கப்பட்ட கனியை உண்ட ஆதமும் ஹவ்வாவும் பாவமன்னிப்புக் கோரியதாகவோ இறைவன் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கியதாகவோ எந்தத் தகவலும் பைபிளில் இல்லை. ஆனால் திருக்குர்ஆன் ஆதி மாதா பிதாக்கள் இருவரின் மனமுருகிய பிரார்த்தனையையும் பாவமன்னிப்புக் கோரலையும், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கிய இறைவனின் மகத்தான கருணையையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார் ; (இன்னும் அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும் கருணையாளனும் ஆவான். (2:37) அதற்கு அவர்கள்; '' எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்"" என்று கூறினார்கள். (7:23)

இன்ஷா அல்லாஹ் தொடரும்

Monday, January 21, 2008

கடவுள் நம்பிக்கை நன்மையா அல்லது தீமையா?

கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று தெரிந்து கொள்வதற்கு முன்னால், கடவுள் நம்பிக்கைநல்லதா அல்லது கெட்டதா என்று ஒரு விவாததிற்கு வருவோம். கடவுள் நம்பிக்கை ஏற்படுத்துவதனால்நன்மைதானே தவிர, தீமை இல்லீங்க. இதை ஏன் மக்கள் ஒத்து கொள்ள மறுக்கிறார்களோ, தெரியவில்லை. சரி என்ன என்ன நன்மைகள் என்று நாம் இங்கே அலசி பார்க்கலாம்.

ஒரு வியாபாரி அல்லது தொழில் அதிபர் தன்னோட சுயநலத்திற்காக அவன் தயாரிக்கும் பொருளில்கலப்படம் செய்கிறான். கலப்படம் அல்லது போலி அல்லது இரண்டாம் தரம் என்பது குண்டு ஊசியிலிருந்து,இன்று கடைசியா கண்டு பிடித்திருக்கும் பல அறிவியல் சார்ந்த பொருள்கள் வரைக்கும் (கணினி, கைபேசி,தொலைகாட்சி பெட்டி) இப்படி எல்லா சாதனங்களிலும் போலிகள் நிறைந்து இருக்கின்றன. ஏன் அப்படிசெய்கிறான் என்று பார்த்தால், அவனுடைய குறிக்கோள் காசு மட்டும்தான், எதை பற்றியும் அவனுக்குபயமும் இல்லை மற்றும் கவலையும் இல்லை.

அப்படி தயாரிக்கும் பொருட்களால் பாதிக்கபடுவது பொது மக்கள்தான். வைத்தியத்திற்காக மருத்துவமனைசென்றால் அங்கேயும் போலி மருத்துவர்கள் அல்லது போலி மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை, சம்மந்தமே இல்லாமல் உடலை கிழிக்கும் அல்லது அறுக்கும் சூழ்நிலையும் உருவாகி விடுகிறது. குழந்தைகளுக்குவாங்கும் பால் பவுடரிலும்கூட கலப்படம், இதனால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி குன்றி, மரணிக்கும்குழந்தைகளும் ஏராளம். இந்த உலகில் மனிதன் பிறந்ததிலிருந்து, இறக்கும்வரைக்கும் நல்லபடியாக வாழவேண்டுமா? இல்லையா?

இந்த உலகில் எது நிஜம்? எது பொய்? யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்? இப்படி பல கேள்விகள் எழும் சூழ்நிலைதான் உருவாகி இருக்கிறது. பெற்றெடுக்கும் தாய் அவள் வழி தவறியதால் (கள்ள காதல்),கணவன் மற்றும் பிள்ளைகளை கொல்லும் சூழ்நிலை ஒரு பக்கம், குடும்ப தலைவன் வட்டிக்கு கடன் வாங்கி அதைஅடைக்க முடியாமல் மனைவி மற்றும் பிள்ளைகளோடு தற்கொலைகள் ஒரு பக்கம், போதை மருந்துக்குஅடிமையாகி, தன் உடல் நலன்களை கெடுத்து கொள்ளும் பிள்ளைகள் ஒரு பக்கம், கல்யாணத்திற்கு முன்னால்உடலுறவுகள், கரு உண்டாகுதல், கலைத்தல், அவமானத்தில் தற்கொலைகள், பால்வினை நோய்களால் அழிவுஎன்று பலவாறு மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் வேறு கதைகளும் உண்டு. சாதி விட்டு சாதி காதல் திருமணம், இதனால் குடும்ப பிரிவு, பகைமை,சொத்துக்காக அண்ணன் - தம்பி வெட்டு, குத்து, இந்த தெருவில் நான் ரவுடி, இந்த இடத்திற்கு நானே தலைவன்,நானே தாதா என்று சொல்லி கொண்டு கொலைகாரர்கள் ஒரு பக்கம், வழிப்பறி, திருட்டு, கற்பழிப்பு என்றுஏராளமான தவறுகள் நம்மை சுற்றி நடந்து வருகின்றன. நாம் தினமும் ஒரு செய்தியாக அதை பார்த்துவருகிறோம் என்பதும் உண்மை. மனிதன் உணர்ச்சி வசபட்டு செய்யும் தவறுகள் மிகவும் சொற்பமாகதான் இருக்கும்.ஆனால் திட்டம் போட்டு போட்டு செய்யும் தவறுகள்தான் அதிகம்.

வரதட்சனை கொடுமை இது எல்லா மதங்களிலுமே இருக்கும் பெரிய பிரச்சினை. ஸ்டவ் வெடித்து மருமகள் மரணம். வாழ வெட்டியாக வீட்டுக்கு அனுப்பும் மருமகள், மாமியாரைவெளியேற்றும் மருமகள், இது போல பெற்ற பிள்ளைகள் பெற்றோர்களை துரத்தும் ஓர் அவலம். இன்னும் முதியோர் இல்லம். இப்படி சொல்லி கொண்டே போகலாம்.சிறுவர் காப்பகம், அநாதை இல்லம். அரசு தொட்டில் திட்டம், இதெல்லாம் ஏன்?

மனிதனுக்கு தான் உடுத்தும் உடை அல்லது ஆடை எதற்காக? தன் உடலில் இருக்கும் அங்கங்களைமறைப்பதற்காக, தனது மானத்தை மறைப்பதற்காக அப்படிதானே நாம் விளங்கி வைத்திருக்கிறோம். ஆனால் இன்று பேஷன் ஷோ என்ற பெயரில் உடைகளை குறைத்து மங்கையர்கள் நடந்து வருவதும், இன்னும்தமிழ் சினிமா அல்லது இந்திய சினிமாக்களில் மற்றும் ஆங்கில மொழி திரைபடங்களிலும் வரும் ஆபாச உடைமற்றும் காட்சிகள். அதற்கு மக்கள் மதிப்பீடு கொடுப்பதும், இன்னும் அதை நாகரீகம் என்றும்தானே சொல்கிறார்கள். இன்னும் சில தமிழ்நாட்டுகுடும்ப பெண்கள் அந்த அளவுக்கு மோசம் போகவில்லை என்றாலும், நமது தமிழ்நாட்டிலும்அரை குறை ஆபாச ஆடைகள் வந்துவிட்டதா அல்லது இல்லையா?

ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக பிரான்ஸ் போன்ற நாடுகளில் உடை என்பதே இல்லாமல் நிர்வாணமாககடலில் (பொது இடத்தில்) குளிக்கும் காட்சிகளை இன்று தொலைகாட்சிகளில் ஒளிபரப்பு செய்கின்றனர். 5 வயது பிள்ளையிலிருந்து 80 வயது முதியவர்வரை உடலில் ஒரு ஒட்டு துணிகூட இல்லாமல் கடலில்குளிக்கிறார்கள். இவர்கள் முழுவதும் இயற்கையாக குளிக்கிறார்களாம், வாழ்கிறார்களாம். இது என்னகொடுமையோ? ஏன் மக்கள் அந்த அளவுக்கு மானம் கெட்டு போய்விட்டார்கள். இனி வரும் காலங்களில்உடை உடலில் அதிகம் இருந்தால் அதுதான் அநாகரீகம் என்றுகூட சொல்வார்கள். இப்போவே அப்படிதான்என்று நினைக்கின்றேன்.

இன்று கடவுள் பெயரை சொல்லி எத்தனை சாமியார்கள், பாதிரியார்கள், மத குருமார்கள் பெண்களின்வாழ்க்கையை சீரழித்து கொண்டிருக்கிறார்கள். இவை பெரும்பாலும் எல்லா மதங்களிலும் இருந்தாலும்கூடசாமியார்கள் என்பது கூடுதலாக இருப்பதையும் நாம் காணலாம். "அரசன் அன்றே கொள்வான்" , "தெய்வம்நின்றே கொல்லும்" இதை ஏன் மக்கள் உணர மறுகின்றனர். இறந்து போன எவருக்கும் உங்களது பிரார்த்தனைகாதில் விழுவதில்லை. இறந்தவர் எவரும் உயிரோடு அல்லது ஆவி, பேயாககூட வர மாட்டார். ஜோசியம், ஜாதகம் எல்லாம் குறிப்பிட்ட நேரத்தை கணக்கிட்டு ஒரு யூகமாக ஒரு கருத்தை சொல்வார்கள்.அதில் சில நடப்பதும் உண்டு, ஆனால் அதை பின்பற்றாமல் இருப்பதே நல்லது. ஜோசியம் பார்க்கிறவர்,அவருடைய வாழ்க்கை அல்லது தலையெழுத்தையே அவரால் நிர்ணயிக்க முடியாது, அதுவும் நமக்குதெரிந்த விசயம்தான்.

இப்படி தப்பு செய்பவர்கள் எல்லாரும் கடவுள் நம்பிக்கை இல்லாமல், அல்லது கடவுள் இருந்தால் வணங்கிட்டு, நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஏனெனில் ஒருவன் தவறை செய்யும்போது, எதற்காகவும் பயப்படுவதில்லை, காவல்துறை, சட்டம், எந்த ஒரு பதவியில் இருக்கும் மனிதர் என்று எதற்காகவும் பயப்படுவதில்லை. ஏனெனில் நாமும் மனிதன்.நம்மை கட்டுபடுத்துபவர்களும் மனிதன் என்ற நிலையில், நான் ஏன் கட்டுபடனும் என்று இன்று குற்றங்கள்அதிகம் அதிகம் பெருகி இருக்கின்றன. ஆனால் கடவுள் என்பவர் இருக்கிறார், அவர் நம்மை கண்காணித்து கொண்டிருக்கிறார் என்ற பயம் எல்லா மக்களுக்கும் ஏற்படனும். கடவுள் நம்மை தண்டிப்பார், இந்த உலகத்தில் இல்லாவிட்டாலும் மறுமையில் தண்டிப்பார், நாம் இறந்த பிறகு நம்மை அவர் உயிர்தெழுவ செய்வார்என்று நம்பிக்கை கொள்ளலாம். அப்படி நம்பிக்கை கொள்வதால் இந்த உலகில் நாம் எதை இழக்கிறோம்?எதையும் இழப்பது இல்லை, தவறான அல்லது கெடுதலான ஒன்றை தவிர, இந்த உலகிலும் நாம் ஒழுக்கமானவர்களாக வாழ்வதற்கு கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம்.

கடவுளுக்காக நாம் உலகில் ஒருவரை ஒருவர் அன்பு செலுத்தி வாழனும். ஒருவருக்கொருவர் உதவி செய்துவாழனும். காசு-பணம் மட்டும் வாழ்க்கை இல்லை. உணர்வுகள் நிறைந்தது வாழ்க்கை. எல்லாரும் ஒரு தாய்-தந்தை வழி பிறந்தவர்கள். வேறு நாடு அல்லது வேறு மதம் எதிலிருந்தாலும் எல்லோரும் சக மனிதர்கள்.எல்லோரும் நமது கூட பிறந்த சகோதர மற்றும் சகோதரிகள். எல்லோரும் நமது இரத்த பந்தங்கள்.யாரையும் யாரும் ஏமாற்ற கூடாது, தவறு இழைத்துவிட கூடாது. இதுபோன்ற எண்ணங்கள் வளர்ந்தால் எப்படி இருக்கும்? இந்த உலகம் நல்ல நிலையில் இயங்கும்.







Friday, January 18, 2008

பர்தா பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கின்றதா?

பர்தா பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கின்றதா?

பெண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற கட்டுரை
உம்மு ஷஹீரா W/o முஹம்மது ஷரஃபுதீன், Banawi Container Group, Jeddah


ஆண்களின் இச்சையை தூண்டாத வகையில் பெண்கள் அணியக்கூடிய ஒரு கண்ணியமான உடையையே இஸ்லாம் பர்தா என்கிறது. இந்த பர்தா பெண்களின் சுதந்திரத்தை எந்த வகையிலும் பறிக்கவில்லை. முஸ்லிம் பெண்களுக்கு கடமையாக்கப்பட்ட பர்தா பின்வருமாறு இருத்தல் வேண்டும்.1. முகத்தையும் கைகளையும் தவிர உடம்பின் ஏனைய பாகங்கள் எல்லாவற்றையும் மறைப்பது.2. உடல் உறுப்புக்களைப் பார்க்கக் கூடிய அளவில் அந்த ஆடைகள் மெல்லியதாக இருக்கக் கூடாது.3. ஆடைகள் மிகவும் இறுக்கமின்றி நெகிழ்வானதாக இருக்க வேண்டும்.4. ஆண்களின் ஆடைகளின் பிரதிபலிப்பைப் போல பெண்களின் ஆடை இருக்கக் கூடாது.5. மற்ற சமூகப் பெண்களின் உடைகள் போல இருக்கக் கூடாது.6.வாசனை திரவியங்கள் தடவிய ஆடையாக இருக்கக் கூடாது. (ஒரு பெண் மணம் பூசி அதன் வாசனையை நுகரும் வண்ணம் அவர்களைக் கடந்து போவாளாயின் அவள் ஒரு விபச்சாரியென நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் - இந்த ஹதீஸை இமாம் அஹமத், அந்நிஸாஈ ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்).7. நமது செல்வச் செழிப்பை எடுத்து காண்பிப்பது போன்ற, அதாவது காட்சிப் பொருளாக ஆடம்பரமான ஆடைகளை பர்தாவாக அணியக் கூடாது.

பெண் என்பவள் மறைக்கப்பட வேண்டியவள். அவள் தனது உடல் அழகை வெளிகாட்ட அரைகுறையாகவும் கவர்ச்சியாகவும் ஆடை அணிவது வெட்கக்கேடான செயலாகும்.

அல்குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆதாரம்:-
பெண்கள் பர்தா அணிவதைப் பற்றி அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் பல இடங்களில் கூறியிருக்கிறான். அல்லாஹுவின் திருத்தூதர் முஹம்மது(ஸல்) நவின்றுள்ளதாக பல ஹதீஸ்களும் தெரிவிக்கின்றன. திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.

"நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும் அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக்கிருபையுடையவனாக இருக்கிறான்".(அல்குர்ஆன்-33:59)

இதன் மூலம் பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்தியிருக்கிறான். மேலும் பெண்கள் எத்தகைய பண்புகளுடன் இருக்க வேண்டும் என்பதை பற்றியும், மஹரமற்ற ஆண்களுக்கு தன் அலங்காரங்களை காண்பிக்கக் கூடாது என்பது பற்றியும் கீழ்க் கண்ட வசனம் விளக்குகிறது.

மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: "தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்; தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்; மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம். அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ¤வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: "உலகில் தன் கணவனுக்கல்லாது மற்றவர்களுக்கு தன்னை அழகுபடுத்தி திரியும் பெண்ணின் நிலை மறுமையின் இருளைப் போன்றதாகும். அங்கு எவ்வித ஒளியும் இருக்கமாட்டாது. (திர்மிதீ - 1167)

எனவே, ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாக அல்லாஹுவின் கட்டளைக்கு கீழ்படியும் விதமாக பர்தா அணிய வேண்டும்.

பர்தா இல்லாவிட்டால் ஏற்படும் விபரீதங்கள்:-

ஒரு பெண்ணுக்கு இயல்பாகவே அமைந்துள்ள அச்சம், மடம், நாணம், பயர்ப்பு, அடக்கம் போன்ற பண்புகளுக்கு ஏற்ற விதமாகவே பர்தாவும் அமைந்துள்ளது. எந்த ஒரு பெண்ணையும் கண்கள் கண்ட பிறகு தான் மனம் அவள் பேரில் நாட்டம் கொள்கிறது. பர்தா அணிவதினால் கண்களுக்கு திரையிட்டாற் போலிருக்கும் தகாத எண்ணங்கள் தோன்றாது. எத்தகைய கட்டுப்பாடும் இல்லாத மற்ற சமூகப் பெண்கள் ஏன் பர்தா அணியாத நம் இஸ்லாமியப் பெண்களும் பொது இடங்களிலும், அலுவலகங்கள், கல்லூரி பாடசாலை போக்குவரத்து போன்றவற்றிலும் அனுபவிக்கும் துன்பங்கள் தொந்தரவுகள் ஏராளம். நாம் தினந்தோறும் நாளேடுகள், தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள் வழியாக எவ்வளவோ விஷயங்களை அறிந்து கொண்டுதானிருக்கிறோம்.

சில வருடங்களுக்கு முன்பு ஷரீகா ஷா என்கிற கல்லூரி மாணவியை ஆட்டோவில் சென்ற ரவுடிகள் அவளை பிடித்து இழுத்து ஆட்டோவின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அப்பெண் தெருவில் இழுபட்டு மரணித்ததை அவ்வளவு விரைவில் யாரும் மறந்திருக்க முடியாது. சரிவர உடலை மறைத்து உடை உடுத்தாததினால் தான் பெண்களுக்கு இப்படியான சம்பவங்கள் நேருகிறது என்று காவல் அதிகாரிகளால் பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. பர்தா அணிந்த ஒரு பெண்ணும் பர்தா அணியாத ஒரு பெண்ணும் தெருவில் நடந்து செல்லும் போது இவ்விருவரில் ஆண்கள் யாரை கிண்டல் கேலி செய்வார்கள் என்று ஜாகிர் நாயக் என்னும் அறிஞர் நிகழ்ச்சி ஒன்றின் போது மக்களைப் பார்த்துக் கேட்டார். பர்தா அணியாத பெண்ணைத் தான் என்று எல்லோரும் ஒட்டுமொத்தமாக பதில் சென்னார்கள்.

ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பெண்கள் உடையணிவதே ஆண்களை குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று பெங்களூர் இன்ஸ்டியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கூறுகிறது. பல்வேறு மாநிலங்களில் பெண்கள் அணியும் ஆடைக்குறித்து வங்க தேசம் உட்பட நமது நாட்டில் 125 கல்லூரிகளில் 20000 மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணிவது நம் நாட்டில் பெருகிவரும் குற்றங்களுக்கு காரணமாக அமைகிறது. இது ஆண்களையும் குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று 75 சதவீத மாணவர்கள் கூறினார்கள் என்று அந்த நிறுவனம் கூறுகிறது. (ஆதாரம் - தினமலர் ஜூன் 2-ம் தேதி 2001-ம் ஆண்டு)
தமிழகத்தில் ஒன்பது மாதகாலங்களில் மட்டும் கற்பழிப்பு-445 வழக்குகளும், பாலியல் பலாத்காரம்-1614 வழக்குகளும், பெண்களை கடத்தியதாக-224 வழக்குகளும், ஆபாசமாய் பேசியதாக-2422 வழக்குகளும், வரதட்சணை கொடுமை-904 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என இந்த தகவலை சமூகநலத்துறை அமைச்சர் ப.வளர்மதி சட்டபேரவையில் தெரிவித்தார்.(ஆதாரம் - தினமணி நவம்பர் 11-ம் தேதி 2001-ம் ஆண்டு)
பர்தா இல்லாததினால் ஏற்பட்டுள்ள இத்தகைய விபரீதங்களை தடுக்கும் விதமாக இனிமேலாவது நம் சகோதரிகள் பர்தா உடுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

பர்தா சுதந்திரத்தை பறிக்கவுமில்லை, பாதிக்கவுமில்லை, எங்கள் முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை என வாழ்ந்து காட்டியவர்கள்:
பர்தா சுதந்திரத்தை பறிக்கவுமில்லை, பாதிக்கவுமில்லை, எங்கள் முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை என வாழ்ந்து காட்டிக்கொண்டிருப்போர் எண்ணற்ற பேர் உள்ளனர். எனக்குத் தெரிந்த சில மருத்துவர்கள், வேலைக்குச்செல்லும் என் சில தோழியர்கள் பர்தா அணிந்து தான் அவரவர் அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள்.

பிரபலமானவர்களைப் பற்றி சொல்வதென்றால் கேரள நாட்டை சேர்ந்த கமலா சுரய்யாவை குறிப்பிடலாம். இவர் கேரளாவின் மிக புகழ் பெற்ற எழுத்தாளர். 1999-ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தான் இஸ்லாத்தை தழுவியதற்கு இரண்டு காரணங்களை கூறுகிறார். ஒன்று பர்தா மற்றொன்று இஸ்லாம் பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பு.

உலகில் உள்ள ஆடைகளில் மிகவும் அழகானது பர்தா என்று குறிப்பிடுகிறார். நான் எப்பொழுதும் பர்தா உடுத்தியவளாகவே இருக்க விரும்புகிறேன். அது ஆத்மார்த்தமான பாதுகாப்பு அளிப்பதாக உணர்கிறேன். நிறைய முஸ்லிம் பெண்மணிகள் பர்தா அணிவது பற்றி கேட்டு வருவார்கள். அவர்களுக்கு பர்தாவின் அவசியத்தை எடுத்துரைத்து பர்தா அணியுமாறு ஊக்குவிப்பேன் என்கிறார்.

கேரள முஸ்லிம் மக்களிடையே பர்தா கலாச்சாரம் மிகவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. முன்பெல்லாம் மாதம் ஒன்றுக்கு 50 பர்தாக்கள் விற்ற கடைகளில் இப்பொழுது 200 பர்தாக்கள் வரை விற்பதாக ஒரு கடைக்காரர் கூறுகிறார்.(ஆதாரம்: http://us.rediff.com/news/2004/sep/15igi.htm)
மற்றும் ஒரு பிரபலமான பெண்மணி ஏஞ்சலா வில்லியம்ஸ் கதீஜத்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றவர். சென்னை அமெரிக்க தூதரக அலுவலகத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றுகிறார். அரபியிலும் சரளமாக பேசுகிறார். குர்ஆன், ஹதீஸிலும் ஆழமான அறிவு படைத்தவர். பர்தா நாகரிகத்திற்காகவோ அழகுக்காகவோ அணியப் படுவதில்லை. பெண்களின் அழகை அன்னியரின் பார்வையிலிருந்து மறைக்க வேண்டும் என்பதற்காகவும், மற்ற முஸ்லிம் அல்லாதவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவும் என்று இவர் கூறுகிறார். மேலும் பர்தா அணிவதால் புழுக்கமாக இருக்கும், பாரபட்சத்துற்காளாவோம் என்பதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. என்னை பொறுத்தவரை பர்தா அணிவதால் என் உடலில் துளிர்க்கும் ஒவ்வொரு வேர்வை துளிகளுக்கு பகரமாகவும் நான் சகித்துக் கொள்ளும் அசெளகரியங்களுக்கு பதிலாகவும் பர்தா அணியும் ஒரே காரணத்திற்காக நான் எதிர்க் கொள்ளும் பாரபட்சங்களுக்கு பதிலாகவும் இன்ஷா அல்லாஹ் எனது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றே நான் நம்புகிறேன். பர்தா அணிவது கூட ஒரு வகை ஜிஹாத் என்றே நான் கருதுகிறேன். அமெரிக்கத் தூதரக அலுவலகத்திற்கு வந்தீர்களானால் என்னை பர்தா அணிந்த கோலத்தில் தான் பார்ப்பீர்கள் என்று கூறுகிறார்.(ஆதாரம்: சமரசம் 1-15 அக்டோபர் 2002)
லண்டனில் உள்ள நியூ ஸ்காட்லாண்ட் யார்டில் இஸ்லாமிய பெண் போலீசார் பர்தா அணிந்து பணிபுரிகிறார்கள். ஈரான், மற்றும் சூடான் நாடுகளிலும் பெண்கள் பர்தா அணிந்து காவல்துறையிலும், ராணுவத்திலும் கடமையாற்றுகிறார்கள்.
பர்தாவின் அவசியத்தை உணரும் மேற்கத்தியர்கள்:

மேற்கத்திய நாடுகளில் எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் சரி ஆண் பெண் பேதமின்றி எல்லோருமே ஒன்றாக செயல் பட வேண்டிய பண்பாட்டு சூழலில் அம்மக்கள் வசிக்கிறார்கள். இதனால் இவர்கள் மிக எளிதாக இனக்கவர்ச்சியில் சிக்குண்டு சீரழிகிறார்கள். காரணம் பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவது தான்.

நொரீன் என்னும் அமெரிக்க பெண்மணி "சிகாகோ டிரிபியூன்" என்னும் பத்திரிக்கையில் நிருபராக வேலை பார்ப்பவர். தன் வேலை நிமித்தம் செய்திகள் சேகரிக்க வெளியே செல்லும் போது பர்தா அணிந்து தான் செல்கிறார். நவீன அமெரிக்க சூழலில் இஸ்லாமிய ஒழுக்கக் கோட்பாடுகளுக்கு ஏற்ப தன் கணவருடனும் மகளுடனும் வாழ்ந்து வருகிறார். அவர் நீச்சல் மற்றும் நடை பயிற்சியின் போதும் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய உடை உடுத்தி தலையில் தொப்பி அணிகிறார். பர்தா அணிவது என்பது பெண்மையின் அனைத்து பண்புகளையும் பெண்களுக்கு அதிகப்படுத்துகின்றது, தவிர பெண்மையை ஒடுக்கும் விதமாக அது அமையவில்லை எனவும் கூறுகிறார். ஆதாரம்: (http://www.oprah.com/tows/pastshows/towns_past_20011005_g.jhtml)
ஹலீமா, நூர், ஸபியா, ஸாதியா இவர்கள் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பர்தா அணிந்தபடி தான் வெளியே எங்கும் செல்வார்கள். கனடா நாட்டவர்கள் இவர்களிடமும், இவர்களைப் போன்று பர்தா அணியும் மற்ற சில பெண்களிடமும் இது கனடா நாடு, நீங்கள் இங்கே பர்தா அணியாமல் சுதந்திரமாக இருக்கலாம் என்று கூறுவார்களாம். அதற்கு இந்த பெண்கள் நாங்கள் எல்லோரும் முஸ்லிம்கள், அல்லாஹுவின் கட்டளைக்கு அடிபணிந்து நாங்கள் பர்தா அணிகிறோம், இது ஒரு சுதந்திர நாடு, நாங்கள் விரும்பியபடி ஆடை அணிய எங்களுக்கு உரிமையிருக்கிறது என கூறுகிறார்கள்.(ஆதாரம்: http://www.islamfortoday.com/hijabcanada.htm)
இந்த பெண்களின் மூலம் பர்தாவின் அவசியத்தை மேலைநாட்டவரும் உணர்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

பர்தாவை பிற்போக்குத்தனம் என கூறுபவர்களின் நோக்கம்:
மேற்கத்திய மக்கள் பெருவாரியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். இஸ்லாத்தின் இந்த முன்னேற்றத்தை தடுப்பதற்காக யூதர்கள் பல வழிகளில் முயல்கின்றனர். அவர்கள் அனைத்து தரப்பு மக்களிடையே இஸ்லாத்தை பிற்போக்குவாத மதம் என்றும், தீவிரவாத மதம் என்றும், காட்டுமிராண்டிதனமான மதம் என்றும், பெண்களின் சுதந்திரத்தை பறிக்கக்கூடிய மதம் என்றும் பலவாறாக சித்தரித்து மக்களை திசைதிருப்ப முயல்கின்றனர். இதில் ஒரு முக்கிய ஆயுதமாக பர்தாவையும் கையில் எடுத்துள்ளனர். பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறது என்கிற ரீதியில் பர்தா பற்றிய தவறான எண்ணங்களை மக்கள் மத்தியில் பரவச் செய்கின்றனர்.
உதாரணமாக பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் பர்தா அணிவதை தடை செய்துள்ளார்கள். இதன் உள்நோக்கம் கிறிஸ்தவ பாரம்பரியத்தை காப்பாற்றுவது தான். மேலும், சமீபத்தில் நடந்த ஐக்கிய ஐரோப்பிய அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் இஸ்லாம் தளைத்தோங்குவதை தடுக்கும் எண்ணத்துடன் பர்தா அணிவது பெண்களை பிற்போக்கு படுத்தி, அவர்களின் சுதந்திரத்தை பறிக்கிறது என்ற சர்ச்சையை ஏற்படுத்தி பர்தாவை தடை செய்துள்ளனர். இதே தடையை ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாண்ட், ஆகிய நாடுகளிலும் அமல்படுத்தும் சூழ்நிலைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. (ஆதாரம்: http://www.freep.com/new/nw/islam/8_20040308.htm)
முஸ்லிம் நாடான துருக்கியை ஐக்கிய ஐரோப்பிய அமைப்பில் அங்கத்தினராக சேர்த்துக் கொள்ள இஸ்லாத்தின் கொள்கையை அடகு வைக்க கூறுகின்றனர். இதன் காரணமாக அங்கேயும் பர்தாவை தடை விதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக பிளிட்ஸ் பியாஸ் என்ற கல்லூரி மாணவி பர்தா அணிந்து பல்கலைகழகத்திற்குள் நுழையும்போது தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டாள்.(ஆதாரம்: http://www.inminds.co.uk/hijab-ban/personal.html)
நாகரீகம், படிப்பு, சுயகட்டுப்பாடு இவையே சிறந்த தற்காப்பு. இவையிருந்தாலே போதும்; பர்தாவின் அவசியம் தேவையில்லை என்று சொல்லக்கூடிய மேலைநாடுகளில் ஒன்றான கனடா நாட்டில், அந்நாட்டுப் பெண்கள் ஆறு நிமிடத்திற்கு ஒரு பெண் வீதம் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்.(ஆதாரம்: http://www.forumhub/expr/13422.20393.00.27.24.hg/)
இஸ்ரேல், பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலுள்ள கிறிஸ்தவ மிஷனரியிலிருந்து பண உதவிகள் பெறுவதற்காக இலங்கையின் விடுதலைப்புலி அமைப்பினர் அங்குள்ள முஸ்லிம்களை ஒடுக்கும் விதமாக பர்தாவையும் ஒரு பகடைக் காயாக பயன்படுத்துகின்றனர்.(ஆதாரம்: http://www.Muslimedia.com/archives/world99/sri-hijab.htm)
அல்லாஹு எல்லா பெண்களையும் பேரழகுடன் படைத்திருக்கிறான். பர்தாவினுள் இருக்கும் அவ்வழகை ரசிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில் காமவெறி பிடித்த கயவர்கள் பர்தாவை பிற்போக்குத் தனம் என கூறுகிறார்கள். பெண்களுக்கு சுதந்திரம் தருகிறோம். மேலை நாடுகளைப் போல நம் நாட்டையும் நவீனமாக்குகிறோம் எனக் கூறி அழகிப் பேட்டி, மாடலிங், மற்றும் விளம்பரப் படங்கள் போன்ற கலாச்சார சீரழிவை விளம்பர முதலாளி வர்க்கத்தினர்கள் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நடத்துகிறார்கள். கணவர் மட்டுமே பார்க்க வேண்டிய அழகை எல்லோரும் பார்க்க வரும்படி விளம்பரப்படுத்தி நுழைவுச் சீட்டின் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். பர்தாவை ஆதரித்தால் எங்கே இது மாதிரி அரைகுறை ஆடைகளுடன் பெண்களை நடக்கவிட்டு அவர்களைக் காட்டி பணம் சம்பாதிக்க இயலாமல் போய்விடுமோ என்கிற பயத்தினால் பர்தாவை பிற்போக்குத்தனம் என்றும் கூறுகிறார்கள்.

இஸ்லாத்தின் உண்மை நிலையை அறியாமல் பர்தா அணிவதற்கு எதிரான வாதங்களை மாற்றுமதத்தினர் வாதிட்டாலும் அதே தரப்பினரில் இஸ்லாத்தின் மேன்மையையும் பர்தாவின் முக்கியத்தையும் உணர்ந்து இஸ்லாத்தை தழுவி கொண்டே தான் இருக்கிறார்கள்.
பெண்கள் பர்தா அணிவது எந்தவிதத்திலும் அவர்கள் சுதந்திரத்தை பாதிக்கவில்லை, அவர்கள் முன்னேற்றத்திகு எந்த தடையாகவும் இல்லை எனபதை மேலே தொகுத்தளித்திருக்கும் கருத்துக்கள் தெளிவாக விளக்குகின்றன.

எனவே எல்லா பெண்களும் அல்லாஹ்வின் கட்டளையின் படி அவர்கள் மரணம் வரை பர்தாவைப் பேணி தன்னை அன்னிய ஆண்களின் பார்வையிலிருந்து காத்துக் கொண்டு இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹுவின் பொருத்தத்தை தேடி கொள்ள வேண்டும்.

Wednesday, January 16, 2008

இஸ்லாத்தில் இல்லாத சடங்குகள்

இஸ்லாத்தில் இல்லாத பழக்கங்கள் அல்லது சடங்குகள் அல்லது பண்டிகைகள் :

அல்லாஹ்வின் வேதமான குரானும் மற்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டி தந்தவழி முறையும் ஆகியவை மட்டுமே இஸ்லாம் ஆகும். இவைகள் இரண்டும் மட்டுமே இஸ்லாம். எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு சொல்ல வேண்டுமென்றால் குரான் மற்றும் ஹதீஸ்களை படித்து, தெளிவு பெற்று, தீர்ப்பு சொல்லிவிடலாம். இது போன்ற எளிய முறையை, உண்மையான முறையை வேறு எந்த ஒரு மதத்திலும் அல்லது வேதத்திலோ காணமுடியாது. இதுவும் இஸ்லாத்தின் தனி சிறப்புகளில் ஒன்று.

முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளை நான் சென்ற பதிவில் சொல்லி இருந்தேன். அதை தவிர முகர்ரம் மாதத்திற்கு வேறு என்ன சிறப்பு இருக்கிறது என்று தேடினால் நமக்கு ஆதார பூர்வமான குரான், ஹதீஸ்விளக்கங்கள் ஏதும் இல்லை என்பதே உண்மை.

இந்த மாதத்தில் நடந்த மற்றொரு நிகழ்வு என்னவென்றால், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேர குழந்தைகளான ஹசன், ஹூசைன் அவர்கள் கொல்லப்பட்டதும் இந்த முஹர்ரம் 10-ஆம் நாள்தான்.உண்மையில் அது ஒரு சோகமான நிகழ்வுதான், வருத்தபட கூடிய நிகழ்வுதான். இந்த ஒரு நிகழ்வைசென்ற பதிவில் நான் சொல்லாமல் விட்டுவிட்ட ஒரு விசயம் ஆகும்.

மூஸா (அலை) அவர்களுக்கான வெற்றியை நினைவில் கொண்டு, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும்வகையில் நாம் இந்த முஹர்ரம் மாதத்தின், இந்த குறிப்பிட்ட நாட்களை கண்ணியபடுத்த வேண்டுமே தவிர,வேற எந்த ஒரு காரணத்திற்காகவும் இந்த மாதத்தில் வேறு எந்தவிதமான சடங்குகள் செய்வதற்கு அல்லாஹ்தனது திருமறையிலோ அல்லது நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிமுறையிலோ இல்லை என்பது மிகவும் குறிப்பிடதக்கது.

ஆனால் இன்று என்ன நடக்கிறது? பிற மதத்தவரிடமிருந்து கற்று கொண்ட புத்தாண்டு வாழ்த்துக்கள்,முஹர்ரம் அரபி மாதத்தின் முதல் மாதமாம், ஆதலால் ஒருவொருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளைபரிமாறி கொள்கின்றனர். இது இஸ்லாத்தில் இல்லாத ஒரு வழிமுறையாகும், இதனால் பெரிசாக ஏதும்நல்லது நடந்துவிட போவது இல்லை. மாறாக கெடுதலே, இஸ்லாத்தில் இல்லாத ஒரு வழிமுறையை கொண்டு வந்து நுழைப்பது வது வழிகேட்டில் கொண்டு போய் முடியும் என்று நபி (ஸல்) அவர்கள்கற்று தந்திருக்கிறார்கள்.

இன்னும் இவர்கள் ஹசன், ஹூசைன் அவர்கள் இருவரும் கொல்லபட்ட துக்க செய்தியை ஒரு விதமான பாவனைகளில்கொண்டாடி வருகின்றனர். இது எதை அடிப்படையாக வைத்து இப்படி செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை.நமது நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் மார்க்கத்தை முழுமை படுத்திவிட்டேன் என்று அறிவித்ததும், அல்லாஹ்அதை குரானில் குறிப்பிட்டு இருப்பதும் மிகவும் குறிப்பிடதக்கது. நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு ஏற்பட்டஎந்த நிகழ்வுகளும் இஸ்லாம் ஆகிவிடாது என்பது எல்லோரும் ஒப்பு கொள்ளும் விசயம். நபி (ஸல்)அவர்களுக்கு பிறகு நபி அல்லாத மனிதர்களால் ஏற்படும் நிகழ்வுகளை இஸ்லாத்தில் நுழைப்பதும்பெரும் பாவமாகும். இதை பிததத் என்று சொல்வார்கள்.

இஸ்லாத்தை பொருத்தவரைக்கும் எந்த ஒரு நபர், நமக்கு நெருங்கிய நபர், நமது குடும்பத்தில் மிகவும் நெருக்கமானநபர் இறந்துவிட்டாலும் மூன்று நாட்கள் மட்டுமே துக்கம் அனுஷ்டிக்கபட வேண்டும் என்று இஸ்லாம்நமக்கு சொல்லி தருகிறது. அப்படி இருக்கையில் 1400 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த இருவருக்காகமட்டும் ஏன் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள் இவர்கள் (குறிப்பாக ஷியா என்று சொல்லபடும் இவர்கள்), இன்னும் எந்த ஒரு மனிதனும் தன் உறுப்புகளை சிதைத்து கொள்ள கூடாது என்று இஸ்லாம் சொல்லி தந்திருக்கிறது ஆனால் இவர்கள் கத்தியால் தனது உடம்பில் கீறி கொண்டு ஊர்வலம் நடத்தி செல்கிறார்கள்,இது அதிகமாக கண்டிக்கபட வேண்டிய விசயம். மேலும் மற்ற மதங்களில் செய்வது போலவே நெருப்பில்நடந்தும், ஓடியும் ஏதோ ஒன்றை செய்கிறார்கள், எதற்காக அப்படி எல்லாம் செய்ய வேண்டும்? அல்லாஹ் ஒரு போதும் இதை விரும்ப மாட்டான் அல்லது ஏற்க மாட்டான் என்பது இவர்களுக்கு ஏன்தெரியாமல் போனது?

எந்த ஒரு மனிதனையும் அவனுடைய சக்தி மீறி அல்லது அவன் தாங்க முடியாத அளவுக்கு துன்பத்தை இறைவன் ஒரு போதும் தருவதில்லை என்று சொல்கிறான். மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் முதியோர் ஒருவர், தனது இரு ஆண் பிள்ளைகளின் தோலில் தொங்கியவாறு (நடக்க முடியாமல்) சொர்ந்து காலை ஊண்டிஊண்டி வருகையில், ரசூல் (ஸல்) அவர்கள் அதை பற்றி வினாவினார்கள். அதற்கு அந்த மனிதரின்பிள்ளைகள் இவர் நடந்தே ஹஜ் செய்ய வேண்டும் என்று நேர்த்தி கடன் செய்து இருக்கிறார் என்று கூறினார்கள்.அதற்கு நபி (ஸல்) அவர்களை கண்டித்து, முதலில் அவரை ஒட்டகத்தில் ஏற்றுமாறு சொல்லி இருக்கிறார்கள்.

அதே போன்று இன்னொரு பெண்மணி இப்படி நேர்த்தி கடன் வைத்து நடந்து வருகையில் அவர்களையும்எச்சரித்ததாக நாம் ஹதீஸ் நூல்களில் காணலாம். கடுமையான வெயில் மற்றும் தொலை தூரம் நடந்து வரும்இதுபோன்ற செயல்களுக்கே நபி அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்றால், இவர்கள் கத்தியில் கீறிகொண்டும், நெருப்பில் நடந்து கொண்டும், ஏதேதோ வாசகங்களை வாயினால் மொழிந்தும், புதிது, புதிதாகமார்க்கத்தில் நுழைத்த இவர்களுக்கு பாவம் ஒன்றை தவிர வேறு ஏதும் இல்லை என்பதே நமக்கு தெரிகிறது.

இஸ்லாமிய கடமைகளில் ஒன்றான தொழுகையில்கூட மலம், ஜலம் கழிக்க அவசரமாக இருந்தால், அதைசெய்துவிட்டு, சுத்தபடுத்தி கொண்டுதான் அதன் பிறகே தொழுகைக்கு செல்ல வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது. ஜமாத் தொழுகை நடைபெற்று கொண்டிருக்கும் வேலையில்கூட அதை தவற விட்டுவிடுவோமோ என்று வேகமாக ஓடி எல்லாம்கூட வந்து தொழ சொல்லவில்லை, மாறாகஅமைதியாக, நிதானமாக செல்வதே இஸ்லாம் வலியுறுத்துகிறது.

ரமலானில் கடமையான நோன்பாகட்டும், அல்லது உபரியான சுன்னத் அல்லது நபிலான நோன்புகளாகட்டும்எல்லாவற்றிற்குமே அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் தூதர் நமக்கு அதிகமான சலுகைகளை வழங்கி இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். இஸ்லாம் அத்துனை எளிய மார்க்கமாக இருக்கும் பொழுது,தன்னை இப்படி எல்லாம் வறுத்தி கொள்வதை அல்லாஹ் ஒரு போதும் விரும்ப மாட்டான் என்பதுநமக்கு தெளிவாக தெரிகிறது.

நம்மால் முடிந்தவரை நமது நெருக்கமான உறவுகளுக்கும் அல்லது நம்மால் சொல்ல கூடிய, தடுக்க கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு இது மாதிரியான செயல்களை நாம் சுட்டி காட்ட வேண்டியதுநமது கடமை ஆகும்.

அல்லாஹ் அதற்குரிய நன்மையை இம்மையிலும், மறுமையிலும் நமக்கு தருவான் என நம்பிக்கை கொள்வோம்.